மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில்  நடைபெற்றது. இந்த மாமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளவந்த மாமன்ற உறுப்பினர்களுக்கு செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் சில தி.மு.க., மாமன்ற உறுப்பினர்கள் செல்போனை எடுத்துச்செல்வோம் என கூறி பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டம் தொடங்கியபோது தி.மு.க., மண்டல தலைவர்கள் தங்களது வார்டு பகுதிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் பலமுறை சாலை , குடிநீர் பாதாள சாக்கடை வசதிகள் குறித்து மனு அளித்தும் கூட போதிய நிதி இல்லை என காரணம் கூறி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை குற்றச்சாட்டு வைத்தனர்.



 

மேலும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் காய்கறி சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் முறையாக வாடகை வசூலிப்பது இல்லை எனவும் மாநகராட்சி பகுதிகளில் பில் கலெக்டர்கள் முறையாக வரியை வசூலிக்காத நிலையில் கவுன்சிலர்களே வரி வசூலிக்கும் நிலை உள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து  மண்டலம் 5 ன் தலைவரான சுவிதா பேசியபோது  மண்டல தலைவர்களுக்கான உரிமைகள் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டதாகவும் மண்டல தலைவர்கள் எந்த புகார் அளித்தாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை என கூறினார். மேலும் தங்களது பகுதியில் குப்பை வண்டி , குடிநீர் வசதி போன்றவை குறித்து மேயர் தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டங்களில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு எந்தவித பதிலும் வரவில்லை என மேயர் முன்பாக குற்றச்சாட்டு வைத்தார் 




தங்களுடைய வார்டு பகுதிகளுக்கு தேவையான பணிகள் குறித்து புகார் அளித்தால் நகரப் பொறியாளரை பார்த்து சொல்லுங்கள் என அடிக்கடி மேயரே கூறுவதாக நேரடியாக குற்றச்சாட்டு வைத்தார். அதற்கு மேயர் நானா சொன்னேன் என மூன்று முறை திரும்பத் திரும்ப கேட்க அதற்கு தி.மு.க., மண்டல தலைவரும் ஆமாம் நீங்கள் தான் கூறினீர்கள் என மீண்டும் மீண்டும் பதில் அளித்ததார். அப்போது மாமன்ற கூட்டத்தில் தி.மு.க., மண்டலத் தலைவருக்கு ஆதரவாக திமுக அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் இருக்கைகளை தட்டி வரவேற்றனர். தி.மு.க., மேயருக்கு எதிராக திமுக மண்டல தலைவர் பேசியபோது மாமன்ற உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றது மேயருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

 



இதனை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சோலை ராஜா பேசியபோது

 

உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தி.மு.க., மாமன்ற உறுப்பினர்களுக்கான ரகசிய கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர், நகரப்பொறியாளரை அழைத்து சென்றது ஏன் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் திமுக கவுன்சிலர்கள் தங்களுக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை என கூறி மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.