கேள்வி: 15 ஆயிரம் கி.மீ., தூரம் 65 நாட்கள் பயணம் எப்படி இருந்தது உங்களின் தேர்தல் பரப்புரை ?


உதயநிதி: நவம்பர் 20ல் கருணாநிதி வீட்டு வாசலில் துவங்கிய பரப்புரை தொடர்ந்து போச்சு. அடுத்தடுத்து கைது பண்ணாங்க. இவ்வளவுக்கும் இன்டோர் மீட்டிங் தான் போட்டோம். அப்புறம் முதலமைச்சர் பிரசாரம் ஆரம்பிச்சதும் தான் என்னை ப்ரீயா விட்டாங்க. அந்த நேரம் பார்த்து 8 மாதமா நிறுத்தியிருந்த சூட்டிங் வேற ரெடி பண்ணிட்டாங்க. அங்கேயும் போக வேண்டியதா போச்சு. ஏப்ரல் கடைசியில் தான் தேர்தல் தேதி அறிவிப்பாங்கன்னு நெனச்சோம்.  ஆனால் 20 நாளுக்கு முன்னாடியே அறிவிச்சுட்டாங்க. ஒரு மாதமா சென்னையிலேயே இல்லை. சேப்பாக்கம் திருவல்லிக்கேணியின் வேட்பாளர் வேற நான். அங்கேயும் ஓட்டு கேட்கணுமே? என்ன பண்றதுனு தெரியல என சொல்லி சிரிக்கிறார். அப்போ தான் நிர்வாகிகள் எனக்கு பயங்கரமா உதவுனாங்க. தெம்பு கொடுத்தாங்க. நாடாளுமன்ற தேர்தலில் நான் வேட்பாளர் இல்லை என்பதால் பெரிய டென்ஷன் இல்லை. ஆனால் இந்த முறை நானே வேட்பாளர். போன முறை ராகுல் காந்திக்கு பிரசாரம் செய்தேன்; இந்த முறை எங்க அப்பாவுக்கு பிரசாரம் செய்தேன். அதுவே எனர்ஜியாகிடுச்சு.




கேள்வி: இப்போ தான் பிரசாரம் முடிந்து போச்சே...  என்ன பண்றீங்க?


உதயநிதி: பிரசாரத்திற்கு சேப்பாக்கம் போகல. அதனால தேர்தலுக்கு பிறகு தொகுதிக்குள்ளே சுற்றி வந்துட்டு இருக்கேன். தேர்தலில் எனக்காக நிறையபேர் வேலை பார்த்திருக்காங்க. அவங்களுக்கெல்லாம் நன்றி சொல்லணும்ல. தினமும் இரு முறை தொகுதி நிலவரத்தை அவங்க தான் எனக்கு அப்டேட் பண்ணாங்க. அவங்களுக்கு நன்றி சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சது. 


கேள்வி: முன்கூட்டிய தொகுதி பணி பார்க்கிற அளவுக்கு ஜெயிச்சிடுவோம்னு நம்பிக்கையா?


உதயநிதி: தொகுதி பணி எதுவுமே நான் பார்க்கல. பிரசாரம் பண்ணப்போ வந்த மனுக்களை வாங்கி, அதை பரிசிலிக்க தனி அணி போட்டிருக்கேன். முடிவு வராம தொகுதி வேலையை துவக்க முடியாது. இப்போ நான் போறது நன்றி சொல்ல தான். கடைசி நாளில் நான் சும்மா கை தான் காட்டிட்டு வந்தேன். கட்சிக்காரங்க தான் உழைச்சாங்க. தொகுதி வேலை அடுத்த மாதம் தொடங்குவேன்.




கேள்வி: செங்கல் எடுத்து செல்லும் ஐடியா எப்படி வந்தது?


உதயநிதி: மதுரையில் பிரசாரம் முடித்துவிட்டு விருதுநகர் புறப்பட்ட போது, மதுரை நிர்வாகிகள் உடன் வந்தனர். அவர்கள் தான் எய்ம்ஸ் வரவிருக்கும் இடத்தை காண்பித்தனர். சுற்றுச்சுவர் மட்டும் தான் இருந்தது. உள்ளே எந்த கட்டடமும் இல்லை. அப்போ தான் நண்பர் ஒருவர் அந்த ஐடியா கொடுத்தார். உடனே அடுத்த பாயிண்ட்டில் செங்கல் எடுத்து வருமாறு நிர்வாகிகளிடம் கூறினேன். அவங்களுக்கு எதுவும் புரியல . நான் பேசி முடிந்ததும் பயங்கர ரீச். மறுநாளும் பேசுனேன். மூன்றாவது நாள் வேண்டாம்னு நெனச்சேன். ஆனால் மக்களே என்னிடம் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. மோடிக்கு அது தான் என் மீதான கோபம். எது எப்படியோ இன்னும் பணி துவங்கவில்லை என மோடி ஒத்துக்கிட்டார் அது போதும்.


கேள்வி: ஸ்டாலினுக்கு மிசா மாதிரி, உதயநிதிக்கு இந்த தேர்தலா?


உதயநிதி: இதை எனக்கான சவாலா பார்க்கிறேன். சேப்பாக்கத்தில் நிற்க முடியுமானு சந்தேகம் இருந்துச்சு. அப்பா நம்பி கொடுத்தாரு, ஏத்துக்கிட்டேன். தமிழ்நாடு முழுக்க ஜெயிப்பது உறுதி. ஆனால் சேப்பாக்கத்தில் அதிக வாக்குகளில் ஜெயிக்க வேண்டும் என ஆசைபட்டேன்.




கேள்வி: இந்த தேர்தலில் எதையாவது மிஸ் செய்ததா நினைக்கிறீங்களா?


உதயநிதி: எப்பவுமே என் தாத்தாவை மிஸ் பண்றேன். சேப்பாக்கத்தில் பேசும் போது  அவர் நியாபகம் வந்து வாட்டுச்சு. அவர் இருந்திருந்தா மகிழ்ச்சியாயிருப்பார். பிரசாரத்தை முடிச்சிட்டு தாத்தா நினைவிடம் போனதும் ஒரு மாதிரி ஆயிடுச்சு. அதே மாதிரி அப்பா எனக்காக திருவல்லிக்கேணியில் ஓட்டு கேட்கும் போதும் நெகிழ்ந்து போனேன்.


கேள்வி: தாத்தா கருணாநிதி, அப்பா ஸ்டாலின் யார் ரோல் மாடல்?


உதயநிதி: கண்ணில் வலது பிடிக்குமா? இடது பிடிக்குமா? என்று கேட்டால் எதை சொல்றது. தாத்தா ஒரு ஆல் ரவுண்டர். அவர் அடிச்சா சிக்சர் தான். அவரை யாரிடமும் ஒப்பிட முடியாது. அப்பாவின் உழைப்பு பிடிக்கும். தமிழகத்தில் அவர் கால்படாத இடமில்லை. தாத்தாவிடம் பாராட்டு பெற்றவராச்சே அப்பா.


கேள்வி: கருணாநிதி இல்லாத தேர்தல் பத்தி ஸ்டாலின் ஏதாவது பகிர்ந்தாரா?


உதயநிதி: அவரது அனுபவத்திற்கு என்னிடம் பேச வேண்டியதில்லை. நான் தான் அவரிடம் அவ்வப்போது அறிவுரை வாங்குவேன். எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்ற பின் கோபாலபுரம் வீட்டில் அப்பா தனியா அமர்ந்து தாத்தா இல்லையே என வருத்தப்பட்டார். மற்றபடி அனைத்து தொகுதியிலும் தாத்தா தான் வேட்பாளர் என பணியாற்றினோம்.




கேள்வி: உங்கள் பிரசாரம் பற்றி தந்தையாக ஸ்டாலின் ஏதாவது விமர்சனம் வைத்தாரா?


உதயநிதி: எய்ம்ஸ் செங்கல் பிரசாரம் பண்ண முதல் நாள் இரவு எனக்கு போன் பண்ணாரு. ‛எங்கப்பா இந்த ஐடியாவ பிடிச்சன்னு,’ கேட்டாரு. நானும் அதை பிரசாரத்தில் பேசுனேன்னு சொல்லி மகிழ்ந்தார். சந்தோசமா இருந்தது.


கேள்வி: தளபதி இப்போ தலைவராகிட்டாரு, தளபதி இப்போ யாரு?


உதயநிதி: திமுகவிற்கு எப்போதும் ஸ்டாலின் தான் தளபதி. தமிழக மக்களுக்கும் அவர் தான் தளபதி. அவர்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும் தளபதியா நின்னு அப்பா காப்பாத்துவாரு.


கேள்வி: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் போட்டி போடனும்னு எப்படி தோணுச்சு?


உதயநிதி: நான் தான் அந்த தொகுதியை கேட்டேன். சின்ன தொகுதி. பேராசிரியர் நின்ற தொகுதி வேற. தயாநிதி மாறன் அண்ணன் தான் முதன் முதலில் என்னை நிற்க வையுங்கன்னு கோரிக்கை வெச்சார். மூத்த நிர்வாகிங்க டி.ஆர்.பாலு, துரை முருகன் எல்லாரும் அதை தான் சொன்னாங்க. தொகுதி சிறியது என்பதால் 6 நாளில் கவர் பண்ண முடிஞ்சது. சேப்பாக்கம் என்னுடைய அரசியல் வாழ்வில் மிகப்பெரிய மைல் கல்லா இருக்கும்.


கேள்வி: சேப்பாக்கத்தில் குஷ்பு போட்டியிடுவதா இருந்துச்சு, அவர் மாறியதை எப்படி பார்க்குறீங்க?


உதயநிதி: யார் போட்டியிட்டாலும் இதே வேலை தான் பார்த்திருப்பேன். செய்ய வேண்டிய தேர்தல் வேலையை செய்திருக்கேன். யார் போட்டிங்கிறது முக்கியமில்லை. ஸ்டாலினா எடப்பாடியாங்கிறது தான் முக்கியம்.


கேள்வி: உங்க தொகுதியில் பா.ம.க., நின்றதை எளிதா பார்த்தீங்களா?


உதயநிதி: எதிர்த்து நிற்பது யார் என்று பார்க்கவில்லை. நம்ம என்ன செய்ய போறோம்னு யோசித்தேன். சின்னத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கப் போறோம்னு தான் கவனம் செலுத்தினேன்.


கேள்வி: இந்த 65 நாள் ஓயாத பிரசாரம்,. சவுகரியமா இருந்ததா?


உதயநிதி: எங்கங்க…காலையில 7:30 மணிக்கு காபி குடிப்பேன். குளிச்சதும் நிர்வாகிகள், வேட்பாளர்களை அழைச்சு பிரசாரம் பண்ணப்போற தொகுதியின் விபரத்தை கேட்பேன். அமைச்சர் தொகுதி என்றால் அவர்களின் ஊழல் விபரங்களை கேட்பேன். அப்படியே வேனில் ஏற வேண்டியது தான். பல நாள் மதிய உணவே இருக்காது. சில நேரம் சான்விட்ஜ், பீட்சா தருவாங்க. சாப்பாடு எங்கேனு கேட்பேன். டைம் இல்லை தம்பினு சொல்லிடுவாங்க. என்றாவது 10 நிமிடம் கிடைக்கும். அதுல சாப்பிட்டா உண்டு. ராத்திரி 10 மணியை தாண்டிட்டா பேச முடியாது. கையை மட்டும் காட்டிட்டு போவேன். ரூம் வந்ததும் அப்பாவிடம் பேசுவேன். அப்புறம் மனைவி,குழந்தைகள் வாட்ஸ் ஆப் இல்லைன்னா பேஸ் டைம்ல பேசுவாங்க. தூங்குறதுக்கு முன்னாடி நண்பர்களிடம் அரை மணி நேரம் டிஸ்கஸ்,  இப்படி தான் போச்சு. 




கேள்வி: துரைமுருகன் கூறியபடி உதயநிதி அமைச்சரவைக்கு வாய்ப்பு இருக்கா?


உதயநிதி: துரைமுருகன் மாமா என்னை தூக்கி வளர்த்தவர். என் மீதான அதீத அன்பில் பேசியிருப்பார். நக்கல் அவருக்கு நல்லா வரும். அது கூட நக்கலா இருக்கலாம். என்ன மாமா இப்படி பேசிட்டீங்களேனு அவரிடம் கேட்டேன், ‛அதுல என்னப்பா தப்புன்னு,’ சொல்லிட்டாரு.


கேள்வி: அவரை விடுங்க, உங்களுக்கு ஆசை இருக்கா?


உதயநிதி: எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லீங்க. கத்துக்க வேண்டிய விசயம் நிறைய இருக்கு.  இன்னும் நிறைய உழைக்க வேண்டியிருக்கு. இன்னும் 10 நாட்கள் கிடைத்திருந்தால் 234 தொகுதியும் பிரசாரத்தை முடித்திருப்பேன். தேர்தல் முடிஞ்சதும் தமிழ்நாடு முழுக்க போகணும்னு அப்பாவிடம் கோரிக்கை வெச்சிருக்கேன். நன்றி சொல்றதுக்காக!


கேள்வி: முதலமைச்சர், அமைச்சர் ஆசையெல்லாம் உண்மையாவே இல்லையா?


உதயநிதி: இப்போ தான்  எம்.எல்.ஏ., போட்டிக்கே வந்திருக்கேன். அப்பா முதல்வர் ஆகணும்னு தான் உழைச்சிருக்கோம். எங்களுடைய ஒரே குறிக்கோள் அது தான். திமுக அரசு அமைக்க வேண்டும். அப்பா நல்லாட்சி தருவார்.




கேள்வி: உதயநிதிக்கு ‛மூன்றாம் கலைஞர்’ பட்டம் தரப்படுகிறதே?


உதயநிதி: அய்யோ… அது ஏன் கேட்குறீங்க… நிறைய பேரை திட்டிட்டேன். நிறைய பேரிடம் நேரிலும் சொல்லிட்டேன். நடவடிக்கை எடுக்கப்படும்னு மிரட்டிட்டேன். அப்பாவும் பலமுறை சொல்லிட்டாரு. என்ன செய்யுறது… என் மீது அதீத அன்புல செய்யுறாங்க. பட்டாசு வெடிக்காதீங்க, மாலை, சால்வை போடாதீங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்றாங்க. நம்ம சொல்றதை அவங்க கேட்கனும்னு இல்ல. இனிமே நானே போய் போஸ்டர்களை கிழக்க வேண்டியது தான்.


கேள்வி: மோடி, அமித்ஷாவை அதிகமாக பேசிட்டீங்க, திமுக ஆட்சிக்கு வந்தா மத்திய அரசோட எப்படி இணக்கம் இருக்கும்?


உதயநிதி: இப்போ இருக்குற ஆட்சியும் இணக்கமா  தான் இருக்கு. தமிழ்நாட்டுக்கு என்ன கிடச்சது? அப்பா கேட்க வேண்டிய விதத்தில் கேட்டால் , நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்.அதிமுக மாதிரி அடிமையா இருக்க மாட்டோம். எங்களை பத்தி எந்த ஊழல் பட்டியலும் அவங்களிடம் இல்லை. பயமில்லை.


கேள்வி: முகவரி கொடுத்தீங்களே, ஐடி ரைய்டு வந்தாங்களா?


உதயநிதி: தங்கை வீட்டுக்கு ரெய்டு வந்துட்டு காலையில் இருந்து டிவி பார்த்துட்டு போயிருக்காங்க. என் வீட்டுக்கு யாரும் வரலே.




கேள்வி: ஸ்டாலின், கனிமொழி, உதயநிதியை தவிர திமுக பிரசாரத்திற்கு ஆளில்லையா?


உதயநிதி: நாங்க 4 பேர் மட்டுமில்ல 40 பேர் பிரசாரம் பண்ணிருக்கோம். எல்லா இடத்திற்கும் போகணுமே. நான் சினிமாக்காரன் என்பதால் எனக்கு மீடியா வெளிச்சம் கிடச்சது. மற்றபடி எல்லாரும் தான் பிரசாரம் பண்ணிருக்காங்க.


கேள்வி: திமுக எம்.எல்.ஏ.,க்களை பாஜக வாங்கிடும்னு இணையதளத்தில பேசப்படுதே?


உதயநிதி: மற்ற மாநிலம் மாதிரி தமிழகத்தில் எம்.எல்.ஏ.,க்களை வாங்க முடியாது.


கேள்வி: அதிகாரிகளை நீங்க எச்சரித்தது விமர்சனமாச்சே, இப்பவும் அவங்க பேரு நியாபகம் இருக்கா?


உதயநிதி: நான் பிரசாரம் துவக்குனதும் தொடர்ந்து நான்கு நாள் அரெஸ்ட் பண்ணாங்க. நான்காவது நாளில் தான் ரொம்ப பண்ணாங்க. அப்போ போலீஸ்காரங்க தான் டிஜிபி ராஜேஷ் தாஸ் பத்தி சொன்னாங்க. அதனால் தான் அவர் பெயர் சொன்னேன். மற்றபடி கோபம் இல்லை. என்னை நான்கு நாளும் போலீஸ் அழைத்து சென்றதை பல இடத்தில் பாராட்டினேனே? நான் சொன்ன அதிகாரி பாலியல் புகாரில் காத்திருப்போர் பட்டியலுக்கு போயிருக்கார். கொடுமை என்னன்னா… எடப்பாடி பிரசாரத்தில் அந்த புகார் சம்பவம் நடந்திருக்கு என்பது தான்.


கேள்வி: ஜெய்ஷா சொத்து மேல் உங்களுக்கு என்ன ஆசை?


உதயநிதி: அய்யோ…அவர் சொத்து மேல எனக்கு என்னங்க ஆசை. என்னோட வளர்ச்சிக்கு திமுகனு பேசுனாரு. தமிழக வளர்ச்சிக்கு நீங்க என்ன பண்ணீங்க. உங்க பையன் வளர்ச்சி எவ்வளவு பெரிய அசுர வளர்ச்சி. 32 வயதில் மகனை பிசிசிஐ செயலாளரா ஆக்கியிருக்கீங்கனு கேட்டேன். என்னை தனிப்பட்ட முறையில் பேசுனதால, நானும் பேசுனேன் அவ்வளவு தான்.


கேள்வி: கடைசி நாளில் அதிமுகவின் நாளிதழ் விளம்பரம் திமுகவை பாதித்ததா?


உதயநிதி: 10 வருசம் நாங்க ஆட்சியில் இல்லை. அவங்க தான் இருந்தாங்க. நியாயமா சாதனையை சொல்லிருக்கனும். ஆனால் அவங்க செய்யல. அவதூறு போட்டாங்க, அது மக்கள் மத்தியில் எடுபடாது. எனது போட்டோ கூட அதில் இருந்தது. நான் அதை படிக்கவில்லை, சும்மா பார்த்தேன் அவ்வளவு தான். கடைசியில் அவ்வாறு செய்தது தவறு. இன்னும் 20 நாளில் எல்லாம் தெரிந்திடும்.


கேள்வி: சைக்கிளில் விஜய், அஜித்தின் ‛மாஸ்க்’ எப்படி பார்த்தீங்க?


உதயநிதி: அவங்க பண்ணதுக்கு நான் பதில் சொல்ல முடியாது. அவங்க மனசுல என்ன இருந்துச்சுனு எனக்குத் தெரியாது. அவர்கள் மனதில் எதுவும் இருக்கலாம். அதற்கு நான் உள் அர்த்தம் கற்பிக்க முடியாது. விஜய் ஏதோ விளக்கம் கொடுத்திருந்தாரு. அது அவர் விருப்பம். கருப்பு, சிவப்பு மாஸ்க் அஜித் விருப்பம். நான் என்ன சொல்றது.


கேள்வி: ஒருவேளை திமுக வந்தால், அதிமுகவின் எந்த திட்டம் முதலில் ரத்தாகும்?


உதயநிதி: நான் ஆரம்பத்தில் இருந்து சொல்றது அது தான். நீட் தேர்வு ரத்து. நீட் தேர்வில் இறந்தவர்கள் வீட்டிற்கு நான் தான் சென்றேன், தொடர்ந்து மூன்று நாளில் 4 மரணங்களுக்கு போனேன். ஜல்லிக்கட்டுக்கு எப்படி தனிச்சட்டம் போடப்பட்டதோ, அதே போல நீட் தேர்வு ரத்துக்கு தனிச்சட்டம் கொண்டு வருவோம். மாணவர்கள், மக்கள் மெரினாவில் புரட்சி பண்ணினால் கட்டாயம் நீட் தேர்வு ரத்து செய்து தரப்படும்.


கேள்வி: மு.க.அழகிரியிடம் அரசியல் தாண்டி பேசுவீர்கள்?


உதயநிதி: பெரியப்பாவிடம் பேசி பல நாட்கள் ஆகிவிட்டது. தம்பி தயா அழகிரி அவ்வப்போது பேசுவார். என்னோட பேச்சு பார்த்துட்டு அழைத்து பாராட்டுவார். அரசியல் பேச மாட்டோம்.


கேள்வி: கலைஞர், ஸ்டாலின், உதயநிதி… அடுத்து இன்பநிதி தானா?


உதயநிதி: இன்பநிதிக்கு அரசியல் புரிதல் இல்லை. வயதிற்கான அரசியல் புரிதல் தான் இப்போ இருக்கு. என்னோட பேச்சு, அப்பாவோட பேச்சை பார்ப்பார். 2004ல் பிறந்த 16 வயசு பையன். அந்த வயதிற்கான புரிதல் தான் இருக்கு, வீடியோ கேம், கிரிக்கெட், புட் பால் தான் இப்போதைக்கு அவரோட புரிதல். அடுத்து என்ன நடக்கும்னு என்னால ஆரூடம் சொல்ல முடியாது. நானே இப்போ தான் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறேன். என் மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கு. அதை பூர்த்தி செய்யனும்.


கேள்வி: இனி படங்களில் உதயநிதி நடிப்பாரா?


உதயநிதி: ம்…. 3 படம் பாக்கி இருக்கு. சூட்டிங் போகணும். ஆனால் அரசியல் பணி தான் இப்போதைக்கு முக்கியம். இனி மக்கள் பணிக்கு தான் முக்கியத்துவம் தரலாம்னு இருக்கேன்.


கேள்வி: இளைஞரணி செயலாளரா இளைஞர்களுக்கு ஏதாவது அறிவுரை?


உதயநிதி: திராவிட இயக்க புத்தகங்கள், கருணாநிதி புத்தகங்கள் படியுங்கள். எனக்கே நிறைய தெரியாது. கத்துட்டு இருக்கேன். கண்டிப்பா திமுக ஆட்சி அமையும். இளைஞர்களுக்கு நல்லது நடக்கும்.