கழகத்தின் கொடியையும்,பொதுச் செயலாளர் என்ற பதவியையும் சசிகலா பயன்படுத்துவதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் ஆணையத்தில்  சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கு பிறகு சீராய்வு மனு செய்தார், அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மனு நிராகரிக்கப்பட்டு, டெல்லி உயர்நீதிமன்றத்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டு  உச்சநீதிமன்றத்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட  நிலையில் கட்சியினர் மத்தியிலே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், மோசடியான வேலைகளில் ஈடுபட்டு, அமைதிக்குப் பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற  குற்றவியல் எண்ணத்தோடு, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கா சசிகலாவின் செயல் என்பது சட்டத்திற்கு உட்பட்ட செயல் அல்ல. 


’’சசிகலாவின் மனு நிராகரிப்பு’’


அனைத்து வகையிலும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் கூட சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தன்னை பொதுச்செயலாளராக அறிவிக்கவேண்டும் என்று சொன்ன அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனை கூட இன்றைக்கு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றோம். இவர்கள் முழுமையான அளவுக்குச் சட்டத்தை மதிக்காமல், ஒரு உள்நோக்கத்தோடு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, 17.10.2021 அன்று புரட்சித்தலைவர் நினைவு இல்லத்திற்குச் சென்று அங்குக் கல்வெட்டைத் திறந்து,கொடியை ஏற்றினார். அந்த கல்வெட்டில் தன்னை பொதுச்செயலாளர் என்று போட்டுக்கொண்டார்கள். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.


’’சசிகலா மீது வழக்கு போட அரசுக்கு விருப்பமில்லை’’


வழக்கமாகப் பொதுமக்கள் புகார் அளித்தாலே புகார் பதிவு செய்யவேண்டும். எங்கள் கட்சியினர் மீது பொய் வழக்கு அளித்தால் காவல்துறை எப்ஐஆர் போடுவார்கள்.ஆனால் சசிகலா மீது எப்ஐஆர் போடுவதற்கு இந்த அரசுக்கு விருப்பம் இல்லை. முதலமைச்சருக்கும் விருப்பம் இல்லை. காவல்துறைக்கும் விருப்பம் இல்லை. அவர் மீது எப்ஐஆர் போடவில்லை.அந்த புகார் மனுவில் நாங்கள் தெளிவாக குறிப்பிட்டோம்.அவரின் செயல் என்பது சட்டத்தை மீறிய செயல். பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு போட வேண்டும் என்ற அடிப்படையிலே குறிப்பிட்டு தெரிவித்தோம். அந்த மனுவை வாங்கிக்கொண்டு மனு பெறப்பட்டதாக ரசீது அளித்தார்கள். ஆனால் எப்ஐஆர் போடவில்லை. 18.12.2021 அந்த தேதியில் காவல் ஆணையரிடம் கடிதம் அளித்தோம். அதில் மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். அவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என்று மனு அளித்தோம்.அதற்கும் நடவடிக்கை இல்லை. கிணற்றில் போட்ட கல் போல ஆகிவிட்டது. அடுத்து நீதிமன்றத்திற்கு வந்துவிட்டோம். நீதிமன்றத்தில் இன்றைக்கு  ஒரு மணி நேரத்திற்கு மேல் வாக்கு மூலம் வழங்கியுள்ளோம். பல்வேறு பிரிவுகளை குறிப்பிட்டு, கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எங்கள் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளோம். மேற்கொண்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.


’’சசிகலாவுக்கு ஆதரவாக திமுக’’


இந்திய தண்டனை சட்டப்படி அவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்பதை நாங்கள் தெளிவாக நீதிமன்றத்தில் கூறியுள்ளோம். வாக்கு மூலத்தைப் பதிவு செய்துள்ளார்கள். இந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நீதிமன்றம்  நாங்கள் குறிப்பிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்தார். மேலும் சசிகலாவிற்கு திமுக ஆதரவாக  செயல்படுகிறதா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, கண்டிப்பாக யார் புகார் மனு அளித்தாலும் அந்த புகாரில் முகாந்திரம் இருக்கின்றதா என்று காவல்துறை   பார்க்க வேண்டும்.  முகாந்திரம் இருந்தால் எப்ஐஆர் போடவேண்டும். அந்த மனுவில் முகாந்திரம் இருப்பதற்கு நாங்கள் பொதுக்குழுவின் தீர்மானத்தை அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் எங்களுக்கு அளித்த தீர்ப்பின் நகலை அளித்துள்ளோம். டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை அளித்துள்ளோம். உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை அளித்துள்ளோம். மறு சீராய்வு தொடர்பான ஆவணத்தை அளித்துள்ளோம்.


’’திமுகவின் B டீம் சசிகலா’’


இத்தனையும் அளித்தும், இந்த திமுக அரசு சசிகலா மீது எப்ஐஆர் போட்டு நடவடிக்கை எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்ததா என்றால் இல்லை. காரணம் வேடிக்கை பார்க்கின்றது. திமுகவின் பி டீமாகதான் சசிகலா செயல்பட்டுவருகிறார். 2021 ஆம் ஆண்டு அளித்த மனு மீது இன்னும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை ஆணையரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது மிகப்பெரிய இயக்கம்., இந்த இயக்கத்தின் சட்ட திட்டத்தை எல்லாம் அளித்தும், நீதிமன்ற தீர்ப்பை அளித்தும், இவர்கள் செய்வது முழுக்க முழுக்க சட்ட விரோதம் என்று குறிப்பிட்டும்கூட, எப்ஐஆர் போட்டு நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம் இந்த அரசுக்கு. காவல்துறைக்கு என்ன தயக்கம். வேறு வழியில்லாமல் நீதிமன்றத்திற்கு வந்துள்ளோம்.கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் வந்துள்ளோம்.கழகத்தைப் பொறுத்தவரையில் வலிமையாக உள்ளது என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.