கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான ஜீவா இல்லத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டம் வரும் 26 முதல் 28 வரை மூன்று நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது. அகில இந்திய மாநாடு இந்தாண்டு அக்டோபர் 14 முதல் 18 ம் தேதி வரை விஜயவாடாவில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் மக்கள் பிரச்னைகளில் கட்சியின் நிலைப்பாடு குறித்து கோவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.  பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் மூர்க்கத்தனமாக செயல்பட தொடங்கியுள்ளனர். இந்தியாவில் மதவாத ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையாக இருக்கிறது.


அதனை நிறைவேற்ற மதம், சாதி, மொழி காலாச்சாரத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்துகின்றனர். இதனை சாதிக்க பா.ஜ.க.,வை பயன்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலின் பேரில் பா.ஜ.க செயல்படுகிறது. கோவையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு பின்னணியை சேர்ந்தவர்களாக உள்ள நிலையில், தனியார் பள்ளியில் 'சாகா' பயிற்சி அளிக்கப்படுகிறது. இது வன்முறையை தூண்டும் பயிற்சியை கொடுக்கிறது. பொதுத் துறை நிறுவனங்களை மத்திய பாஜக தகர்த்து வருகிறது. பிரதமர் பின்பற்றும் கொள்கைகள் நமது பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கும் கொள்கையாக உள்ளது. ஆய்வு முடிவுகளின் படி பசி, பட்டியினியில் உள்ள 116 நாடுகளில் 101வது இடத்தில் இந்தியா உள்ளது. வங்கிகளை தனியாரிடம் ஒப்படைப்போம் எனக் கூறியதால் வங்கி ஊழியர்களும் போராட்டம் நடத்தினர். 




உழைக்கும் மக்கள் நாட்டின் சுய சார்பை காப்பாற்ற போராடுகின்றனர். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் உள்ள நிலையில் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் நடைபெற்ற போதும், நாடாளுமன்றம் செயல்படாத அவையாக உள்ளது. இதில் 12 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கூட்டாட்சி என்பதன் அரணாக உள்ள அவையே செயல்படாமல் உள்ளது. நாடாளுமன்றம் முடக்கப்படுமானால் ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் தள்ளப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமரை வரவேற்பது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம். ஆனால் பிரதமர் வருகையால் அரசியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை தாம் ஏற்கவில்லை. 


இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு குறித்து ஏற்கனவே பேசி உள்ளோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் முதலில் வேண்டுகோள் விடுத்தது. கூட்டு முயற்சி எடுத்தால் தமிழகத்தில் வாக்கு வங்கி உயரும். கல்வான் பள்ளத்தாக்கில் முன்பு ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காத பிரதமர், தற்போது சீனா கட்டுமானங்களை செய்து வருவது தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.