திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணி மாவட்ட - மாநில - மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட பின்னர் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 


”இன்று நாம் காணும் தமிழ்நாடு 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? இன்று எப்படி மாறியிருக்கிறது? இங்கு எதுவும் தானாக மாறிவிடவில்லை. ஓர் இயக்கத்தின், அதன் தலைவர்களின் இடைவிடாத, சோர்வுறாத உழைப்பும் தியாகமும்தான் தேய்ந்து கிடந்த தெற்கை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளப்படுத்தியிருக்கிறது.


 






இந்த வரலாற்றை இளந்தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் கடமை கழகத்தின் ரத்த நாளங்களான இளைஞரணியினருக்கு உண்டு! கொள்கை வாரிசுகளை வளர்த்தெடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்! அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து - இளைஞரணியினருக்கு எடுத்துக்காட்டாகச் செயல்படும் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு  வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் பணி! எண்ணிக்கையில் மட்டும் அல்ல, எண்ணத்திலும் கொள்கையிலும் வலிமையோடு இருந்தால்தான் இந்த இயக்கம் இன்னும் பல நூறாண்டுகள் இன எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க முடியும்! கொள்கைப்படை திரட்டி இனப்பகை விரட்டுவோம்!” என குறிப்பிட்டுள்ளார். 


இதற்கு முன்னர் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “


“தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வருவது என்னுடைய தனிப்பட்ட ஆட்சி மட்டுமல்ல, நூற்றண்டுகளாக ஒரு இனம்  தாங்கி நிற்கும் கொள்கைகளை மக்களின் ஆதரவோடு செயல்படுத்துகிற திராவிட மாடல் ஆட்சி தான் இது. 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் நோக்கத்தை செயல்படுத்துவதற்கான ஆட்சி தான் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதை இந்தியா முழுவதும் எடுத்துச் சொல்ல தான் தற்போது இந்தியா எனும் கூட்டணி உருவாகியுள்ளது.


”மிரளும் பாஜக”









 


இந்தியா என்ற பெயரை கேட்டாலே சிலர் மிரளுகிறார்கள், அலறுகிறார்கள். பாட்னா மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற கூட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதை பார்த்து பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மத்திய பிரதேசம், அந்தமான் என எங்கு சென்றாலும் பிரதமர் திமுகவை விமர்சிக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடக்கிறதாம், கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்த, வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆட்சி தான் திமுக ஆட்சி. ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால் தாங்கள் ஏதோ வெல்ல முடியாத கட்சி என்பது போல பயம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வருவதால், நேற்று அமித் ஷா வந்ததை போன்று ஒன்றிய அமைச்சர்கள் இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவார்கள்.


”பாவ யாத்திரை”


தமிழ்நாட்டிற்கான ஒன்றிய அரசின் திட்டங்களை தொடங்கி வைக்க அமித் ஷா வந்தாரா, இல்லை ஏற்கனவே அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைக்க வந்தாரா? ஏதோ பாதயத்திரையை தொடங்கி வைப்பதற்காக வந்துள்ளார். அது பாதயாத்திரை இல்லை. குஜராத்தில் 2002ம் ஆண்டும், தற்போது மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை. இரண்டு மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூருக்கு சென்று அமித் ஷாவால் அமைதி யாத்திரை நடத்த முடிந்ததா? அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படாதா என்ற எண்ணத்தில் தான் அவர் தமிழ்நாடு வந்து இருக்கிறார்” என்பது உட்பல சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பேசினார்.