பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் பி.மூர்த்தி, ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், சாலை மார்க்கமாக பசும்பொன் சென்று அங்குள்ள தேவர் நினைவிடத்திலும் மரியாதை செய்தார். 



 

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியில்:- 'நான் பேசுவது எழுதுவது. சிந்திப்பது சேவை செய்வது எல்லாமே என் தேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல' என்று வாழ்ந்தவர் பசும்பொன் தேவர் திருமகனார். தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர் மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர சாதியால் அல்ல" என்று சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார். அனைவருக்குமான தலைவர் அவர்!

 

"‘பக்குவப்பட்ட ஒருவன், இந்து கோவிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும் - கிறித்துவ வளாகத்தில் வைக்கிற மெழுகுவத்தி ஒளியையும் முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற கடரையும் தன் உடலின் இருட்டைப் போக்க எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் வடிவமாகக் காண்பான்" என்று சொன்ன மதநல்லிணக்க மாமனிதர்!

 

"தனியாக இருக்கும்போது சிந்தனை செய்வதில் கவனம் செலுத்துங்கள். கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்' என்று சொன்ன தத்துவஞானி!

 

நேரம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் தீரமும் - அதேநேரத்தில் எறும்பு கடிக்கும் போது கோபம் வராமல் வருடிக் கொடுக்கும் பொறுமைக் குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும்" என்று ஆட்சியாளர்களுக்கு இலக்கணம் வகுத்த அரசியல் மேதை! முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்" என்று முழங்கிய தமிழ் ஆளுமை! பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் முன்மொழிந்த இந்த முத்துமொழிகளைப் பின்பற்றி நடப்பதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி! வாழ்க அவரது புகழ் வெல்க அவரது சிந்தனைகள்! " என தெரிவித்துள்ளார்.

 



 

அதே போல் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். செல்லூர் ராஜூ, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் முத்துராமலிங்கத்தேவரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



 

அப்போது  முன்னாள் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் நாங்கள் கலந்து கொண்டோம். தொடர்ந்து பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதாக அதிமுக மூத்த தலைவர் "திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.