ஒப்பாரி 

 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்துள்ள சூனாம்பேடு ஊராட்சியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 40 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. இந்நிலையில் இங்கு புதிய பேருந்து அமைவதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் ஆலமரத்தை அகற்றினர். இதனை கண்டித்து நேற்று பசுமை தாயகத்தினர் சார்பில் அகற்றப்பட்ட மரத்திற்கு இறுதி அஞ்சலி நடத்தப்பட்டது. மேலும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆலமரம் வெட்டி வீழ்த்தப்பட்டதற்கு ஒப்பாரி வைத்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

 



மரத்திற்கு இரங்கல் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி

 

இது தொடர்பாக பசுமை தாயகம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஐயப்பன் மற்றும் பசுமை தாயகத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர் பசுமை தாயகம் இணை பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில துணை பொது செயலாளர் கண்ணன் கலந்துக்கொண்டு  வெட்டப்பட்ட மரத்திற்கு இரங்கல் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மரத்தை வெட்டிய அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் உதயகுமார் பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் சாந்தமூர்த்தி ஒன்றிய செயலாளர் காளிதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 



கிளைகளை மட்டுமே வெட்ட அரசு அனுமதி அளித்த நிலையில்..

 

இந்த நிலையில் இது தொடர்பாக ட்விட்டர் வலைதளத்தில் அன்புமணி ராமதாஸ் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் பதிவில், "செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் சாலையோரம் இருந்த 40 ஆண்டு ஆலமரம் சட்டவிரோதமாக வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. ஆலமரம் வெட்டப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து பசுமைத்தாயகம் அமைப்பும், பொதுமக்களும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க, கிளைகளை மட்டுமே வெட்ட அரசு அனுமதி அளித்த நிலையில் ஒட்டு மொத்த மரமும் சிலரால் வீழ்த்தப்பட்டது பெருங்குற்றம்.



 

பசுமைக் குழுக்கள்

 

இதற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். 40 ஆண்டுகள் அரும்பாடுபட்டு வளர்க்கப்பட்ட ஆலமரம் சிலரின் சுயநலத்திற்காக வீழ்த்தப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. வெட்டப்பட்ட ஆலமரத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டு பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் தேவையில்லாமல் ஒரு மரம் கூட வெட்டப்படக்கூடாது. அதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட மாநில,  மாவட்ட பசுமைக் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் முழு அளவில் செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.