தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாத கோயிலுக்கு கடந்த மாதம் 11 ஆம் தேதி சென்ற தமிழக பாஜக துணைத் தலைவர் சென்ற போது, கோயில் பூட்டிய நிலையில் இருந்துள்ளது. அதன் பின்னர் பூட்டை உடைத்து கோயிலுக்குள் சென்று பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்துள்ளனர். ஆனால் இவர்கள் பூட்டை உடைக்கும் முன்னரே காவல் துறையினரும் கோயில் நிர்வாக அதிகாரிகளும் வெளியில் நின்று வழிபாடு செய்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


இதனை கேட்காமல், கோயில் பூட்டை உடைத்த பாஜக மாநில துணைத் தலைவர் உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம் உட்பட 50 பேர் மீது பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சட்டத்தினை மீறும் செயலைச் செய்ததிற்காகவும், அதனை முன்னின்று செய்ததிற்காகவும் தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவருக்கு ரத்த கொதிப்பு, நெஞ்சுவலி உள்ளிட்ட உடல் பிரச்சினைகள் இருப்பதாக ராமலிங்கம் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பின் பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உயர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு மாற்றப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பாரதிய ஜனதாக் கட்சியினர் தொண்டர்கள் ஏராளமானோர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் குவிந்தனர். ஆம்புலன்ஸில் இருந்து மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் அலைத்து வரப்பட்டபோது. அவரை பார்க்க பாஜக தொண்டர்கள் முற்பட்டனர்.


இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்க கோரி பாஜக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கே.பி.ராமலிங்கம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் கே.பி‌.ராமலிங்கத்தை காலை முதல் பாஜக தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கத்தை நேரில் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அவர், மத்திய அரசாக இருந்தாலும் மாநிலத்தில் எங்களது வேகத்தை குறைக்க திமுக அரசு முயற்சி செய்து வருகிறது. கே.பி.ராமலிங்கம் கைது சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஓசூருக்கு அவர் வந்து பாரத மாதா கோயில் சென்று வழிபட்டது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். அவர் வருகிறார் என்று தெரிந்து அந்த கோயிலை மாவட்ட நிர்வாகம் பூட்டு போட்டு சென்றது. மாவட்ட ஆட்சியர் தனது செல்போனை ஆஃப் செய்து விட்டார். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளாமல் தமிழக அரசு இதுபோன்ற வழியை கையாண்டு வருகிறது. இதே போல பல தொல்லைகளை திமுக அரசு கொடுத்து வருகிறது. சீப்பை ஒளித்து வைத்தால் திருமணத்தை நிறுத்த முடியாது. பாஜக ஆட்சிக்கு வருவதை திமுக தடுக்க முடியாது. திமுக அழிவு கட்சியாக மாறிவிட்டது. அரசியலில் முதிர்ந்த நபர் ஸ்டாலின். அவரது ஆட்சியில் இதுபோன்ற சில்லரைத் தனமான கைது நடவடிக்கை கண்டிக்கதக்கது. அமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது இதுபோன்ற விரும்பத் தகாத சம்பவத்தை பாஜக ஒரு போதும் அனுமதிக்காது என்று கூறினார்.


இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கத்தை பென்னாகரம் கிளை நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் கேபி ராமலிங்கத்திற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு தெரிவித்தார். தற்போது காவல்துறையினரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் அவர் சிகிச்சைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.