என் மண் என் மக்கள் நிறைவு விழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சி இருப்பதால், பிரதமரின் வருகை தேதியை உறுதி செய்த பின் தேதி அறிவிக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


யாத்திரை:


சென்னை ராயப்பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். வழக்கறிஞர்களுக்கு உள்ள சிக்கல்கள், பிரச்சனைகள் என்னென்ன என்பது குறித்தும், மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கும் நீதித்துறைக்கும் என்னென்ன செய்துள்ளது ,இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் மட்டுமின்றி மூத்த வழக்கறிஞர்கள் நீதித்துறையில் பணியாற்றுபவர்களுடன்  கலந்துரையாடல் நடைபெற்றது.


அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேடையில் பேசுகையில், “ யாத்திரையில் 200 தொகுதிகளை தாண்டி இன்று சென்னையில் நின்று கொண்டு இருக்கின்றோம். யாத்திரை என்றால் மாறுதல் என்று பொருள். இசை கலைஞர்கள், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர், ஜோமாட்டோ-ஜூவிக்கி ஊழியர்களை சந்தித்துள்ளோம்.


வழக்காடு மொழி:


காற்று எப்படி வீசினாலும், யார் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீதி துறை செயல்பட்டு கொண்டு இருக்கிறது. நீதி வழங்கப்படுவது மக்களுக்கும் தெரியும் வகையில் தற்போது மாறி உள்ளது. தமிழகத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என நமது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.


2022 ஆம் ஆண்டு பிரதமர் உரையில் இந்தியாவில் உள்ள அந்தந்த மாநிலங்களின் தாய் மொழிகளுக்கு ஏற்றவாறு நீதிமன்ற வழக்காடு மொழிகளை கொண்டு வரவேண்டும் என பேசியுள்ளார். உச்சநீதிமன்றமும் அரசு இணைந்து வழக்காடு மொழிகளாக அவரவர்களின் தாய் மொழியை கொண்டுவர வேண்டும் என எதிர்பார்த்து இருக்கிறோம்.


வழக்கறிஞர்கள் நலன்:


நீதித்துறையில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு இருக்கும்  சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் 1824 சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியும் சிலவற்றையும் நீக்கியும் உள்ளோம். ஆந்திராவில் வாகன ஆய்வாளராக இருக்க வேண்டும் என்றால், தூய்மையான பற்களை கொண்டு இருக்க வேண்டும் என, சட்டமிருந்தது. அதுபோன்ற சட்டங்களை தான் இன்று நீக்கி உள்ளோம்.


மத்திய அரசின் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களின் மீது ஒரு தரப்பினர் தொடர்ந்து வழக்கு தொடுக்கின்றனர். புதிய நாடாளுமன்றம், ரபேல்,  பணமதிப்பிழப்பு, பெகாசஸ் போன்று பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கிப்பட்டுள்ளது. பாஜக புதுமையாக  கொண்டு வந்துள்ள  திட்டங்களுக்கு எதிராக  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தால் அதனையும்  நாம் ஏற்றுக் கொள்கிறோம். டில்லியில் பார்கவுன்சிலுக்கு ரூ.100 கோடி அம்மாநில அரசு வழங்கி உள்ளது. அதுபோல 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் வழக்கறிஞர்களின் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


அயோத்தி ராமர் கோயிலில் ஒரு ஆண்டுக்குள் 5 மக்கள் செல்வர் என கணிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் இதன் மூலம் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார வளர்ச்சி இருக்கும். இதன் மூலம் அம்மாநில அரசிற்கு ரூ 25000 கோடி வரி வருவாய் கிடைக்கும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.1500 கோடி ரூபாய் கட்டப்பட்ட குழந்தை ராமர் கோயிலால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இருப்பது போல், வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்புச் சட்டம் தேவைப்படும் சூழல் உள்ளது என்றார்.சிஸ்டத்தை சரியாக வைத்து விட்டு செல்ல வேண்டும். அதை சரியாக செய்து விட்டால் அடுத்து வருபவர்கள் சரியாக செயல்படுவார்கள்.


கூட்டணி யாருடன்?


அதனை தொடர்து செய்துயாளர்களிடம் பேசிய அவர், “ இதுவரைக்கும் யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட வில்லை. முறையான நேரத்தில் அதற்கு உரியவர்களால் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். "தேர்தல் பத்திரம்" தகவல் அறியும் சட்டத்திற்கு எதிராக உள்ளதால் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.


பத்திரம் மூலமாக பஜகவிற்கு 52 சதவீதம் நிதி பெறப்படுகிறது. பத்திரம் மூலமாக திமுகவிற்கு 91 சதவீதம் நிதி பெறப்படுகிறது .தேர்தல் செலவுகளை முறைப்படுத்த  வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் பத்திரம் முறை கொண்டுவரப்பட்டது. திமுகவிற்கு தமிழகத்தில் இருந்து மட்டும் 600 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளது. பாஜக ஒரு மாநிலத்தில் சராசரியாக 220 கோடி ரூபாய் தான் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றுள்ளது.


தேர்தல் செலவினங்களை வரையறுப்பது மிகவும் முக்கியம் மேலும் தேர்தல் நிதியை பணமாக செலவு செய்யாமல் காசோலையாகவும் தேர்தல் பத்திரமாகவும் செலவு செய்வதன் மூலம் அதனை வருமான வரி துறையின் கண்காணிப்பில் கொண்டு வர முடியும்.


பிரதமர் வரும் தேதி மாற்றம்:


தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்ததை முழுமையாக ஏற்கிறோம். ஆனால் இதில் மாற்றங்கள் செய்து மீண்டும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற பாஜக முயற்சி செய்யும். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது 5500 பாஜக வேட்பாளர்களுக்கு காசோலை மூலமாக தேர்தல் நிதி கொடுத்த ஒரே கட்சி பாஜக தான்.


என் மண், என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் கலந்து கொள்வது உறுதி.ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதி மாற்றப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள் இருப்பதன் காரணமாக பிரதமர் கலந்து கொள்ளும் தேதி மாற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதிற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாஜகவை குறை கூறுவதை விட்டுவிட்டு அவர்களது பணியை பார்க்க வேண்டும்.


கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது. இதனை திமுகவினர் வாய் திறந்து சொல்ல மாட்டார்கள். திமுகவால் தான் தமிழகம் தேய்ந்து போகிறது திமுகவால் தான் தமிழகம் பின்னோக்கி செல்கிறது கோபாலபுரம் குடும்பத்தால்தான் தமிழகம் அழிகிறது தமிழகத்தின் முதல் குடிமகன்களாக தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பெரும் முதல் நபர்களாக மாற்றுத்திறனாளிகள் இருப்பார்கள். 2026ல் பாஜக தேர்தல் அறிக்கையாகவும் இது இருக்கும்” என தெரிவித்துள்ளார்.