மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.


நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தங்களது இமேஜை உயர்த்திக் கொள்ளும் நடவடிக்கையில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த சூழலில் மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


அதன்படி,  ஜார்கண்ட்  மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும்,  பாஜக தேசியச் செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழக பாஜகவின் முக்கிய நபராவார். இவர் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில்  நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.











  • இதேபோல் நாகாலாந்து மாநில ஆளுநராக, மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவரான இல.கணேசன் கடந்த 2021 ஆம் ஆண்டு தான் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். 

  • ஆந்திர மாநில ஆளுநராக ஓய்வுப்பெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

  • மகாராஷ்ட்ரா மாநிலத்தின் ஆளுநர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த பகத் சிங் கோஷாரியின் ராஜினாமா கடிதம் ஏற்பட்டு அவருக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பைஸ் அந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். 

  • சத்தீஸ்கர் ஆளுநராக, ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மணிப்பூர் ஆளுநராக, சத்தீஸ்கர் ஆளுநர் அனுசுயா உக்யே நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

  • சிக்கிம் ஆளுநராக லட்சுமணன் பிரசாத் ஆச்சார்யாவும், இமாச்சலப்பிரதேசத்தின் ஆளுநராக பிரதாப் சுக்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

  • அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியாவும், மேகாலயா ஆளுநராக, பீகார்ஆளுநராக இருந்த பாகு சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். 

  • இமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • அருணாச்சலப்பிரதேச ஆளுநராக திரிவிக்ரம் பர்னாயக்கும், அருணாச்சல பிரதேச ஆளுநராக இருந்த பி.டி.மிஸ்ரா லடாக் ஆளுநராக பதவியேற்றுள்ளார்.