நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் தோல்வியை தழுவியிருந்தார். தனது தேர்தல் தோல்விக்கு சிவகங்கை மாவட்ட மற்றும் காரைக்குடி நகர பாஜக நிர்வாகிகள் முறையாக கட்சிப்பணி ஆற்றாததே காரணம் என கட்சி மேலிடத்திற்கு எச்.ராஜா புகார் அளித்திருந்த நிலையில், அதனை முற்றிலும் மறுத்திருந்த பாஜக மாவட்ட நிர்வாகிகள், கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் எச்.ராஜாவிற்கு காரைக்குடி நகரப்பகுதியில் 8000 வாக்குகளை அதிமாக பெற்றுத் தந்ததாக காரைக்குடி நகர செயலாளர் சந்திரன் கூறியிருந்தார். தான் இந்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று முன்கூட்டியே எச்.ராஜாவிற்கு தெரிந்ததால் கட்சி மேலிடம் தேர்தல் செலவிற்காக கொடுத்த எல்லா நிதியையும் அவரே வைத்துக் கொண்டதாக குற்றம்சாட்டியதுடன் தற்போது காரைக்குடியிலேயே எச்.ராஜா 4 கோடியில் வீடு கட்டி வருவதாகவும் பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். எச்.ராஜாவின் மருமகன் சூரிய நாராயணன் தரப்பில் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் ராஜினாமா செய்த நிர்வாகிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.



இந்த நிலையில் நேற்று நடந்த பாஜக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், எச்.ராஜா மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில் பாஜகவின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் நேரடியாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கே சென்று எச்.ராஜா மீது புகார் அளித்துள்ள பாஜக மாவட்ட மற்று நகர நிர்வாகிகளை சந்தித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையில் எச்.ராஜா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எச்.ராஜா மீது குற்றச்சாட்டு கூறி நிர்வாகிகள் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


காலையில் மாநில தலைவர் முருகன் எச்.ராஜா மீதான புகார் குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்த நிலையில், உடனடியாக அந்த விசாரணை துவங்கியுள்ளது. காலையில் பாஜக மாநில தலைவர் முருகன் அளித்த பேட்டி இதோ:


உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறிய அவர், தமிழ்நாட்டிலுள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து ஆதிதிராவிட மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என  முதலமைச்சரிடம் விசிக சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பஞ்சமி நிலங்களை மீட்கப்பட வேண்டும் என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தோம்,பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று அவர் கூறினார்.


பாஜக முன்னாள் தேசிய செயலாளர் சட்டமன்றத் தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்ட பணத்தை முறையாக செலவு செய்யாமல் தற்போது காரைக்குடியில் 4 கோடி ரூபாயில் வீடு கட்டி வருவதாக சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஹெச்.ராஜா மீதான புகார் குறித்து விசாரிக்கப்படும் என எல்.முருகன் பதிலளித்துள்ளார்.