சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் மாநில குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழகத்தில் ஆளுநரின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு விரோதமாக உள்ளது என்றார்.


ஆளுநர்களுக்கும் மாநில அரசுக்கு இடையிலான முரண்பாடு பல மாநிலங்களில் உள்ளது என்று கூறிய அவர் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் பல்கலைகழக வேந்தர்களாக நியமிக்கப்படுவது பல விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் நீடிக்க வேண்டியதில்லை; அதற்கு பதிலாக கல்வித்துறை அமைச்சரின் பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவின சுட்டிக்காட்டிய பாலகிருஷ்ணன் கால்நடைகளை காடுகளில் மேய்க்காமல் சென்னையிலா மேய்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.



நீர்நிலைகளை காக்க வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறிய அவர் நீர்நிலை புறம்போக்கு என்ற பெயரில் நூறு ஆண்டுகால குடியிருப்புகளை அகற்றுவது ஏற்புடையதல்ல என்றார். நீதிபதிகள் அரசியல் சாசன விதிகளை மீறி உத்தரவை பிறப்பிக்கின்றனர். மத ரீதியான கொள்கைகள் உட்பட பல்வேறு விவகாரங்களில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதில் அரசியல் தலையீடு உள்ளது; பணி ஓய்வு பெற்ற பிறகு கொளரவ பதவிகள் கிடைக்கும் என்ற அடிப்படையில் நீதிபதிகளின் செயல்பாடு உள்ளது என்று பாலகிருஷ்ணன் பகிரங்கமாக குற்றசாட்டினார்.



பின்னர் ஓமலூர் சென்ற அவர், ஆணவக்கொலையில் உயிரிழந்து, சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட கோகுல்ராஜ் வீட்டிற்கு வந்து அவரது தாய் சித்ரா, சகோதரர் கலை செல்வன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கதீர்ப்பு. அரசு வழக்கறிஞர் சிறப்பாக வாதாடினார். தமிழ்நாட்டில் அடிக்கடி ஆணவ படுகொலைகள் நடந்து, தமிழ் சமுகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல தான் கோகுல்ராஜ் கொலையும் நடந்தது. பல அமைப்புகள் போராட்டம் நடத்திய பிறகே, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா சரியான திசையில் விசாரணை நடத்தி வந்தார். கோகுல் ராஜின் தாயார், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளார். நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. ஆணவ கொலையை தடுத்து நிறுத்த, ஆணவ படுகொலை தடுப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல், கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறினார்.