ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்ய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.





ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சசிகலாவை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக தீவிரமாக ஆலோசித்தனர். மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இருவரும் இந்த சந்திப்பின்போது ஆலோசித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், சசிகலா வெளியேற்றப்பட்டு 2012ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததில் இருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்றும், சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என்றும் விசாரணை அறிக்கையில் கூறியுள்ளனர்.




மேலும், ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய்யான தகவலை தெரிவித்த அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டியும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில்தான் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். இது அதிமுக அமமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க : Arumugasamy Commission : அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்தாரா? ஆறுமுகசாமி ஆணையம் பரபரப்பு தகவல்


மேலும் படிக்க : Jayalalithaa Death Case: டிசம்பர் 4-ந் தேதியே இறந்தாரா ஜெயலலிதா? - தீபக் திதி அளித்ததன் பின்னணி என்ன..? அதிர்ச்சி தகவல்..!