தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று ஆந்திர சட்டமன்றத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில், இனி தான் முதல்வர் ஆகாமல் சட்டமன்றத்திற்குள் நுழையப் போவதில்லை எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா பதிலடி தெரிவித்துள்ளார்.
தன்னை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து காயப்படுத்தி வருவதாகக் கூறியுள்ள சந்திரபாபு நாயுடு, `கடந்த இரண்டரை ஆண்டுகளாக நான் அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். எனினும் இத்தனை நாள்களாக அமைதி காத்து வருகிறேன். இன்று என் மனைவியைக் குறி வைக்கிறார்கள். நான் மானத்துடனும், மானத்திற்காகவும் வாழ்பவன். என்னால் இதற்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது’ என்று அழுகையுடன் தெரிவித்துள்ளார்.
அவர் சட்டமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த போது, சபாநாயகர் தம்மினேனி சீத்தாராம் சந்திரபாபு நாயுடுவின் மைக்கை செயலிழக்கச் செய்ததோடு, சந்திரபாபு நாயுடு டிராமா செய்வதாகவும் விமர்சித்துள்ளார். ஆந்திரச் சட்டமன்றத்தில் விவசாயத் துறை தொடர்பான விவாதத்தின் போது, வாக்குவாதம் எழுந்தது. அப்போது தனது மனக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு.
மேலும், எதிர்க்கட்சியினர் அலுவலகத்தில் தன் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் இதுகுறித்து பேசிக் கொண்டிருந்த போது, உடைந்து அழுதுள்ளார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவரைத் தெலுங்கு தேசம் கட்சியினர் சமாதானப்படுத்தித் தேற்றியுள்ளனர். தொடர்ந்து அவர் மீண்டும் முதல்வராகப் பதிவேற்காமல் சட்டமன்றத்திற்குள் நுழையப் போவதில்லை எனச் சூளுரைத்துள்ளார்.
இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரபாபு நாயுடுவின் இந்தச் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரோஜா, அதில் `விதி யாரையும் விட்டு வைக்காது, சந்திரபாபு. அது அனைவரின் கணக்கையும் சரியாகத் தீர்த்துவிடும். அன்று 72 வயதில் இருந்த என்.டி.ஆருக்கு நீங்கள் செய்தது, இன்று 71 வயதான உங்களுக்கு நடந்திருக்கிறது. நாம் என்ன செய்கிறோமோ, அது நமக்குத் திரும்பும் என்று சொல்லப்படுவது உண்டு. நீங்கள் அதிகாரத்தில் இருந்த போது, ரோஜா புளூ பிலிம்மில் நடித்தவர் என நீங்கள் கூறினீர்கள். நீங்கள் அனைவரையும் விமர்சித்து இருக்கிறீர்கள்’ என்று கடுமையாகப் பேசியுள்ளார்.
தொடந்து பேசிய ரோஜா, முன்னாள் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது அவர் தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் விஜயா, தங்கை ஷர்மிளா ஆகியோரைக் கடுமையாக விமர்சித்தையும் சுட்டிக் காட்டியுள்ளதோடு, தன்னைப் பற்றி ஆபாசமாகப் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது சூளுரையால் இனி வாழ்நாள் முழுவதும் சந்திரபாபு நாயுடுவால் சட்டமன்றத்திற்குத் திரும்ப முடியாது என்றும் ரோஜா கூறியுள்ளார்.