மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சேலத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளனர்.



சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற  சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல், ஆத்தூர், கெங்கவல்லி, சேலம் தெற்கு, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி என பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று 3 ஆவது நாளாக சேலத்தில் நடைபெற்ற  சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.


தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய  அமைச்சர் கே.என்.நேரு  செய்தியளர்களிடம் கூறும்போது, அதிமுக அரசு உறுதியாக இருந்திருந்தால்  மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு  நிறைவேற்றி இருக்க முடியாது. இது விவசாயிகள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் நேரு தெரிவித்தார். தமிழகத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின், வேளாண் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஸ்டாலின். இந்த நிலையில் பிரதமர் மோடி தற்போது வேளாண் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.



இதே விழாவில் பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறும் போது, மூன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுவதற்கான அறிவிப்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நடவடிக்கை எடுப்போம் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது என்பது  விவசாயிகளின் ஒற்றுமைக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி ஆகும். விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் பாஜக தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இனி பாஜகவின்  இந்த சித்து வேலை எடுபடாது என  வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.



அங்கிருந்து புறப்பட்ட அமைச்சர்கள் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று மக்களிடம் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சேலம் மாவட்டம் முழுவதும் திமுக, காங்கிரஸ் மற்றும் விவசாயிகள் மூன்று வேளையும் சட்டங்களை ரத்து செய்ததற்கு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.