அதிமுக பொதுக்குழு வழக்கு:


அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே இரட்டை தலைமை தொடர்பான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, கடந்த  ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில்,  அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.


மேம்முறையீட்டு மனு மீது விசாரணை:


அதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது,  வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க நாங்கள் விரும்புகிறோம் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். தொடர்ந்து, ஓபிஎஸ், ஈபிஎஸ் என்றால் என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பொதுக்குழுவுக்கு எதிராக மனு தாக்கல் எனில், அதன் தீர்மானங்களும் வழக்கின் கீழ் வரும் என தெரிவித்தனர். 


அவைத்தலைவர் அதிகாரம் என்ன?


இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, பொதுச்செயலாளர் பதவியை  மீண்டும் கொண்டு வர முயல்வது,  அதிமுக சட்டவிதிகளுக்கு முரணானது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள், அதிமுகவில் அவைத்தலைவர்  பதவிக்கான பொறுப்புகள் என்னவென நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரம் படைத்தவர் அவைத்தலைவர் என ஓபிஎஸ் தரப்பு விளக்கமளித்தது. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி  செயல்படுகிறார். பொதுச்செயலாளர் பதவியை  மீண்டும் கொண்டுவர முயல்வது சட்டவிதிகளுக்கு முரணானது எனவும் தெரிவிக்கப்பட்டது.


குறுக்கு வழியை பயன்படுத்திய ஈபிஎஸ்:


ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பது 5 ஆண்டு பதவிக்காலம் கொண்டது. 5 ஆண்டுகளுக்கு கட்சியின் முடிவுகளை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து தான் எடுக்க வேண்டும் என்பது விதி. நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றில் இருவரும் இணைந்து  முடிவெடுத்தால் மட்டுமே அவை செல்லும். பொதுச்செயலாளர்  பதவியை குறுக்கு வழியில் எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார். பொதுக்குழுவில் தமிழ் மகன் உசேன்  அவைத்தலைவராக  தேர்ந்து எடுக்கப்பட்டது உட்பட 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களால்  தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதிவி பொதுச்செயலாளர் பதவி. ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர்  என மாற்றம் கொண்டு வந்த பின், ஈபிஎஸ் குழப்பத்தை உருவாக்குகிறார். ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர். அவர் இடத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதே கட்சியின் நிலைப்பாடு. இந்நிலையில், பொதுக்குழுவை கூட்டி அதில் முடிவுகளை எடுத்தது முழுக்க முழுக்க சட்டவிரோதம் என, ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


 


இதையடுத்து, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், நாளை அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து இந்த வழக்கு, நாளை நண்பகல் 12மணிக்கு இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.