அதிமுகவின் எம்.எல்.ஏ.,வாக இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இன்று (நவம்பர் 4) அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

Continues below advertisement

திராவிட கொள்கைகளை பாதுகாக்கும் தலைவர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ நான் திமுகவில் இணைய காரணம், இன்றைய காலக்கட்டத்தில் திராவிட கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கிற ஒரு தலைவராகவும், தமிழக உரிமைகளுக்காக போராடுகிற ஒரு தலைவராகவும், தமிழகத்தின் உரிமைகளை எங்கும் அடகு வைக்காத தலைவராகவும், எந்த சூழலிலும் தான் எடுக்கும் முயற்சிகளை எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை தாங்கி சிறப்பாக முடிக்ககூடிய ஒரு தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். 

அதனை எல்லாம் பார்த்து, தீர்க்கமாக முடிவெடுத்து தான் கட்சியில் இணைந்துள்ளேன். எஞ்சிய வாழ்க்கையிலும் திராவிட கொள்கைகளை பாதுகாக்கக்கூடிய இயக்கமாகவும்,  அதனை தலைமையேற்று இருக்கக்கூடிய ஒரு தலைவனின் கொள்கைகளை நிறைவேற்றக்கூடிய தொண்டனாகவும் என்னை இணைத்து பணியாற்ற உள்ளேன். நான் தற்போது எம்.எல்.ஏவாக இருக்கிறேன். முதலமைச்சரின் ஆலோசனை நடத்திய நிலையில் மாலை 4 மணிக்கு பதவியை ராஜினாமா செய்கிறேன். 

Continues below advertisement

கட்சியை அடகுவைத்த இபிஎஸ்

அதிமுகவை தோற்றுவித்த தலைவரான எம்ஜிஆரும், அதன்பின்னால் கட்சியை வழி நடத்திய ஜெயலலிதாவும் எந்த சூழலிலும் கட்சியை எந்த கட்சிக்கும் அடகு வைக்கவில்லை. அதிமுக என்பது அவர்கள் காலத்தில் இருந்த மாதிரி இல்லை. வேறு ஒரு கட்சியை நம்பி தற்போது இருக்கக்கூடிய துர்பாக்கிய சூழ்நிலையில் இருக்கிறது. கட்சிக்கான விதிகள், கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு அதிமுக பாஜகவின் கிளைக் கழகமாக செயல்படக்கூடிய நிலைக்கு சென்று விட்டது.

ஆனால் திமுக திராவிட கொள்கைகளை பறைசாற்றக்கூடிய பாதுகாக்கக்கூடிய இயக்கமாக உள்ளது. அதை உணர்ந்து நான் இணைந்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தபோது சில நெருடல்கள் இருந்தது உண்மை தான். ஓபிஎஸ் டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்த நிலையில்,  நான் எடுத்திருக்கக்கூடிய நிலைப்பாடு என்பது உறுதியானதாக இருக்க வேண்டும் என நினைத்தேன். 

இன்று அவர்களுடைய கொள்கையும் எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க வேண்டும் என உள்ளது. அதே நபரை தான் தோற்கடிக்க என்னுடைய முயற்சியை எடுப்பேன்” என மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.

மனோஜ் பாண்டியன் அரசியல் வாழ்க்கை 

மறைந்த அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனான மனோஜ் பாண்டியன் தற்போது திருநெல்வேலி ஆலங்குளம்  சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார்.  அடிப்படையில் வழக்கறிஞரான அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக பிரிந்தபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளராக தொடர்ந்து வந்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் ஓபிஎஸ் தரப்பில் தான் இருந்து வந்தார். எனினும் சசிகலாவை தீவிரமாக மனோஜ் பாண்டியன் எதிர்த்து வந்த நிலையில், சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை சந்தித்ததால் அதிருப்தியில் திமுகவில் இணைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.