அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்ட நாளில், இரு எம்.பி.,களை அதிமுக பெறுவது உறுதியாகிவிட்டது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தர்மர் ஆகியோர் இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‛வடக்கே வன்னியர், தெற்கே தேவர்’ என்கிற ஃபார்முலா தான் இது, என்கிற பேச்சு பரவலாக உள்ளது. அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், அதிமுகவின் இந்த முடிவு, அக்கட்சியின் கைவசம் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றியத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 




அதிமுக-திமுக சரிசமம்!


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பல கட்டங்களாக நடந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடந்தன. 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், அதிமுக-திமுக தலா 4 வீதம் 8 இடங்களில் வெற்றி பெற்றன. பிற 7 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சுயே., வேட்பாளர்கள் என்பவர்கள், திமுக மற்றும் அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காமல் சுயேட்சையாக போட்டியிட்டு பெற்ற வெற்றி. அதிலும், திமுகவை சார்ந்தவர்கள் அதிகம். 


உள்ளடியும் உள்ளாட்சியும்!


அதிமுகவும்-திமுகவும் சரிசமமாக இருந்ததால், யார் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றப் போவது என்கிற கேள்வி எழுந்தது. அப்போது, அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தது. அந்த நேரத்தில், வெறும் 4 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த தர்மர், அதிக பெரும்பான்மையுடன் ஊராட்சி ஒன்றியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இது அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. திமுக மாவட்ட செயலாளராக இருந்த காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்-தர்மர் ஆகியோரின் மறைமுக ஒப்பந்தத்தின் பேரில் தான், தர்மர் ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பேற்றார் என்று அப்போது பரபரப்பாக பலர் குற்றச்சாட்டுகளை வைத்தனர். அதை உறுதி செய்யும் விதமாக, திமுக ஒன்றிய கவுன்சிலர் ஒருவரும், அதிமுகவிற்கு அப்போது ஆதரவு தெரிவித்து வெற்றி பெற வைத்தார். 




அமைச்சரை மாற்றிய முதுகுளத்தூர்!


அதன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கீர்த்திகா முனியசாமி  தோல்வியடைந்தார். முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனாலும், ஊராட்சி ஒன்றியம் அதிமுக வசம் இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 29ம் தேதி, முதுகுளத்தூர் பிடிஓ ராஜேந்திரன் பகீர் புகார் ஒன்றை வீடியோவாக வெளியிட்டார். அதிமுக தலைமையிலான நிர்வாகம் நடப்பதால், அங்கு தனது அதிகாரத்தை செலுத்த முடியாத அமைச்சர் ராஜகண்ணப்பன், சம்மந்தப்பட்ட பிடிஓவை அழைத்து பேசுகையில், அவரை ஜாதியை சொல்லி வசைபாடினார் என்கிற புகார் அப்போது தான்  எழுந்தது. 


பற்றி எரியும் பனிப்போர்!


அந்த புகாரின் அடிப்படையில் தான், போக்குவரத்துறை அமைச்சாராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். இதில், ராஜகண்ணப்பன் மீது அதிரடி புகார் அளித்த பிடிஓ.,வின் பின்னணியில் திமுக மாவட்ட செயலாளாரும், ராமநாதபுரம் எம்.எல்.ஏ.,வுமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இருப்பதாக அப்போது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்ற முன்பு முத்துராமலிங்க செய்த உதவியின் காரணமாக, பிடிஓ விவகாரம் வெளியில் வர, அதிமுக ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்த தர்மர் உதவினார் என்றும் பேச்சு உண்டு. அமைச்சர் பதவியை கைப்பற்ற திமுகவிற்குள் நடந்த பனிப்போர் தான் அது என்பது அப்பட்டமாக தெரிந்தாலும், அந்த நேரத்தில் எரிந்த தீயை திமுக தலைமை ஒரு வழியாக அணைத்தது. 


திமுகவுக்கு எது சாதகம்!


இந்த நேரத்தில் தான், அதிமுக தலைமை, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராமரை, ராஜ்சபா எம்.பி.,(மாநிலங்களவை உறுப்பினர்) ஆக தேர்வு செய்துள்ளது. ஒருவருக்கு ஒரு பதவி என்கிற ரீதியில், தர்மர் கட்டாயம், தனது ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியையும், ஒன்றிய கவுன்சிலர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டி வரும். அப்போது தேர்தல் நடக்கும் வரை, அதிமுக 3 கவுன்சிலர்களை தான் வைத்திருக்கும். ஒருவேளை 4 கவுன்சிலர்கள் அக்கட்சிக்கு இருந்தாலும் கூட, அதே சம பலத்தில் திமுகவும் 4 கவுன்சிலர்களை வைத்திருக்கிறது. இம்முறை திமுக ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த முறை எதிர்கட்சியாக இருந்த போது இழந்த ஊராட்சி ஒன்றியத்தை , தன் வசமாக்க திமுக கண்டிப்பாக முனைப்பு காட்டும். 




ஒன்றிய செயலாளர்கள் ரெடி!


அப்படி பார்க்கும் போது, சுயேட்சைகள் 7 பேரின் ஆதரவை பெற அதீத முயற்சியை திமுக முன் வைக்கும். இதனால் இம்முறை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. முதுகுளத்தூர் ஒன்றியத்தை கட்சி ரீதியாக இரண்டாக பிரித்த திமுக, அங்கு இரு திமுக ஒன்றிய செயலாளர்களை நியமித்துள்ளது. சண்முகம் என்கிற ஒன்றிய செயலாளரின் மகள் லெட்சுமி ஏற்கனவே ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். அதே போல மற்றொரு ஒன்றிய செயலாளரான பூபதி மணியின் மனைவியும் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். எனவே , இரு ஒன்றிய செயலாளர்களும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்ற முயற்சிப்பார்கள்.


அதிமுகவுக்கு வாய்ப்பு குறைவு!


இதில் ஒன்றிய செயலாளர் சண்முகம், தேவர் சமூகத்தை சேர்ந்தவர். மற்றொரு ஒன்றிய செயலாளர் பூபதி மணி, யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே அங்கு ஜாதிய ரீதியான பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், ஒன்றிய செயலாளர் சண்முகத்திற்கு ஆதரவு தர வாய்ப்புண்டு. அதே போல, அமைச்சர் ராஜகண்ணப்பன், ஒன்றிய செயலாளர் பூபதி மணிக்கு ஆதரவு தர வாய்ப்புண்டு. இதனால், இன்னும் கூட கோதா நடக்கலாம். ஒருவேளை திமுகவில் இந்த இரு பிரிவு போட்டி நடக்குமானால், அதில் அதிமுக எளிதில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. ஆனால், தர்மருக்கு அடுத்தபடியாக, ஆளுமை செலுத்தும் அளவிற்கு, அந்த ஊராட்சி ஒன்றியத்தில் பெயர் சொல்லும் யாரும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்களாக இல்லை என்கிற பின்னடைவு அதிமுகவிற்கு உள்ளது. அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வால், அக்கட்சி வசமிருந்த ஒரு ஊராட்சி ஒன்றியத்தை இழப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது.