சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்து மலை முருகன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூர், முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையின் திருவடியில் மலர் தூவி வணங்கிய அவர் முருகன் வேலை தாங்கி மூலவரை சுற்றி வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.



இபிஎஸ் சுவாமி தரிசனம்:


உலகிலேயே மிக உயரமான 146 அடி முருகன் சிலையின் உச்சிக்கு சென்று சங்கல்ப பூஜை செய்து, பன்னீர் கலசத்தை கொண்டு வேலுக்கு அபிஷேகம், செய்தும் மலர் தூவியும் வழிபட்டார். இதனை அடுத்து சிலையின் வயிற்றுப் பகுதியில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்தர்களுக்கு பிரசாதத்தை வழங்கினார். இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து அன்னதானம் வழங்கினார்.



தேர்தல் கருத்து கணிப்பு:


குறிப்பாக, அண்மையில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படும் என்று வந்தது. இதனால் அதிமுகவினர் பெரும் கலக்கத்தில் இருந்தனர். இந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து முருகனின் இடுப்பு பகுதியில் அமைந்துள்ள தியான பீடத்தில் 15 நிமிடங்கள் ஆழ்ந்த தியானம் மேற்கொண்டார்.