தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் என்பது மிகவும் உன்னிப்பாக அரசியல் நோக்கர்களில் கவனிக்கப்படும் செயல்பாடுகளில் ஒன்றாகும். இந்த நிலையில், அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு குறித்த அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.


அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூட்டம்:


இதுதொடர்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன் படி, வரும் 26.12.2023 – செவ்வாய் கிழமை காலை 10.35 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேஜ் தலைமையில் நடைபெற உள்ளது.


கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்களவைத் தேர்தல்:


அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டதும், சசிகலா நீக்கப்பட்டதும், சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு இபிஎஸ் – ஓபிஎஸ் மோதலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் நாம் அறிந்ததே. இதையடுத்து, நடைபெற்ற நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகளும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்ததால் தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக முழு அதிகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.


இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டம் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களின் பெரும்பான்மையுடன் நடைபெறும் என்பதால் எந்தவித சண்டை, சச்சரவுகளும் இல்லாமல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும், பா.ஜ.க.வுடனா கூட்டணி முறிவுக்கு பிறகு பொதுத்தேர்தலை சந்திக்க இருப்பது குறித்தும், உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துதல் குறித்தும், தேர்தல் பரப்புரைகள், தேர்தல் பணிகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுமார் 3 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அன்றைய தேதியில் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: நாடாளுமன்ற உறுப்பினராக பதவி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ரா.. லஞ்சம் பெற்ற புகாரில் அதிரடி


மேலும் படிக்க: KCR Hospitalized: நெருக்கடி கொடுக்கும் ரேவந்த்! வழுக்கி விழுந்த கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி!