‛அதிமுக-பாஜக கூட்டணி காலத்தில் கட்டாயம்’ என்கிற ரீதியில் தான் இதுவரை இருதரப்பும் பரஸ்பரம் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கிடையில், சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பாஜக கூட்டணியே காரணம் என ஒரு தரப்பு தலைவர்கள் தங்கள் கருத்தை அதிமுக தலைமை கூட்டங்களில் முன் வைத்தனர். சிறுபான்மையினர் ஓட்டுகளை இலக்க அதுவே காரணம் என பகிரங்கமாகவும் அதற்கு விளக்கம் தந்தனர். 




அதையெல்லாம் அதிமுகவின் இருட்டை தலைமைகளான இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சமரசம் செய்து, பாஜக உடன் இணக்கமான உறவை தொடர்ந்தனர். கடந்த ஆட்சியை நிறைவு செய்ய பாஜக உதவியதே, அந்த சமரசத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. அப்போதிருந்து எதிர்கட்சிகள் ஒரு படி மேலே போய், ‛பாஜக தயவில் அதிமுக செயல்படுகிறது’ என்று கூட விமர்சனம் செய்ததை நாம் எல்லாம் அறிவோம். 



  • அதிமுக ஆதரவோடு தான் பாஜக 4 எம்.எல்.ஏ.,க்களை பெற்றது

  • பாஜக பலத்தால் தான் அதிமுகவுக்கு கணிசமான வாக்கு கிடைத்தது

  • உள்ளாட்சியில் தனித்து நின்று பாஜக தனி பலத்தை காட்டியது

  • பாஜகவின் எதிர்ப்பு அரசியல், பிரதான எதிர்கட்சியாக முன்னெடுக்கிறது

  • திமுகவிற்கு எதிரான அரசியலில் அதிமுக அமைதி காக்கிறது

  • அதிரடி அரசியலால் எதிர்கட்சி அந்தஸ்தை பாஜக பிடிக்கப் பார்க்கிறது


என்பது மாதிரியான கருத்துக்கள், இருதரப்பிலிருந்தும் அடிக்கடி வந்தாலும், அது பெரிய அளவில் தாக்கத்தையோ, எதிர்ப்பையோ ஏற்படுத்தவில்லை. முக்கியமான தலைவர்கள் இக்கருத்தை கூறினால் கூட, ‛அது அவர்களின் தனிப்பட்ட கருத்து’ என இரு கட்சியின் தலைமையும் கடந்து தான் போயின. 


எங்கு தொடங்கியது பிரச்சனை!


ஆனால், பிரச்சனை எங்கு ஆரம்பித்தது என்றால்.... பாஜகவில் சென்னை ஆர்பாட்டத்தில், அக்கட்சியின் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் கூறிய கருத்தில் இருந்து தான். ‛சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் ஆண்மை, அதிமுகவிற்கு இல்லை’ என்கிற மாதிரியான கருத்தை அவர் வைத்த போது, தான், அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சீறினர். அவர்களை சமரசம் செய்ய, இரட்டைத் தலைமைக்கு அப்போது வார்த்தைகளே இல்லை. அண்ணாமலையிடம் நேரடியாகவே அவர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்த போது, அதற்கு அவர் மன்னிப்பு கோரி, அந்த பிரச்சனையை முடித்து வைத்தார். 




ஆனால், ஒரு விசயம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. எப்போதுமே தமிழ்நாட்டில் அதிமுக-திமுக... அல்லது திமுக-அதிமுக என்கிற நிலையில் தான் போட்டி இருக்கும். சமீபமாக , திமுகவை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. தினந்தோறும் அறிக்கை, போராட்டம், ஆர்பாட்டம், பேட்டி என போட்டுத் தாக்கி வருகிறது. உண்மையில், திமுகவிற்கு இப்போதைக்கு பெரிய தலைவலியாகவே பாஜக மாறிவிட்டது. 


அண்ணாமலை மீது கோபம் ஏன்!


இது பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் செயல்பாடுகளை மிஞ்சிய செயல் தான். அதற்கு காரணம், அக்கட்சியின் தலைவரான அண்ணாமலையின் செயல்பாடு. அண்ணாமலை, அடித்து ஆடுகிறார். சில நேரங்களில் அவர் சரிந்தாலும், அதே வேகத்தில் எழுந்து ஓடுகிறார். குறிப்பாக, அவர் வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளால், சில அமைச்சர்கள் ஆடித் தான் போயிருக்கிறார்கள். 


இதெல்லாம் திமுகவிற்கு பாதமாக இருக்குமே தவிர, அது அதிமுகவிற்கு பலம் சேர்க்காது; காரணம், அந்த பலனை பெற போராடுவது பாஜக தான், என்பதை பரவலாக பேசுகிறார்கள். இது அதிமுகவிற்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த பாமக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது. இன்னும் சில கட்சிகளும் ஒதுங்கிக் கொண்டோ, ஒதுக்கப்பட்டோ தனித்து நிற்கின்றன. இதில், அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே இரட்டை குழந்தையாக நிற்கிறது. காலத்தின் கட்டாயத்தில், எதிர்கட்சியாக இன்னும் எழுச்சியோடு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்கிறது.


அதிமுக முன்னெடுக்கும் யோசனை!


திமுக, பெரும்பாலும் மத்திய அரசை சாடி அரசியல் செய்கிறது. அது அக்கட்சிக்கு உதவவும் செய்கிறது. இங்கே பாஜக உடன் கூட்டணி வைத்துக் கொண்டு, மத்திய அரசை விமர்சிக்க முடியாது. வெறுமனே மாநில அரசை மட்டும் எதிர்த்தால், அது அரசியல் எதிர்பார்ப்பாக மட்டுமே பார்க்கப்படும் என்பதால், மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து களமாட வேண்டிய கட்டாயத்தில் அதிமுக நிற்கிறது. 




பொன்னையனின் பொன்மொழிகள்!


கூட்டணிக்கு ‛பாஃய்’ சொன்னால் மட்டுமே, இறங்கி ஆட முடியும் என்பதால், அதற்கு நாள் குறிக்க முடிவு செய்த அதிமுக, அதற்காகவே ஜூன் 23 அன்று, அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேரடியாக கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முன், அதற்கான முன்னோட்டத்தை தொடங்கலாம் என முடிவு செய்த அதிமுக தலைமையின் கருத்து தான், அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் அளித்த பேட்டி!


அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் அளித்த பேட்டி இதோ!


‛தமிழக உரிமைகளுக்கு எதிராக பாஜக போராடுகிறது’ என்கிற பொன்னையனின் பேட்டி, ஏதோ போகிற போக்கில் தெரிவித்த கருத்து அல்ல. அனைவரிடத்திலும் சென்று சேர வேண்டும் என்கிற நோக்கில் நிதானமாக அளிக்கப்பட்ட பேட்டி தான். உண்மையில் பொன்னையனின் பேட்டி, பாஜகவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்காக பொன்னையனை அதிமுக தலைமை கண்டிக்கவும் இல்லை. மாறாக, பொன்னையனின் பேச்சை கண்டித்து பாஜக மூத்த தலைவர் வி.பி.துரைசாமியை, ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருமே ஒன்றாக நின்று கண்டித்தனர். ‛எதற்காக வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்’ என இபிஎஸ் ஒரு படிமேலே போய் விமர்சித்தார். 





இதிலிருந்து, பொன்னையனின் கருத்துக்கு அதிமுகவின் தலைமை, பச்சைக் கொடி காட்டி விட்டது என்பது உறுதியானது . அதோடு நிற்கவில்லை, அதன் பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர், அதே மாதிரியான கருத்தை வெளிப்படுத்த தொடங்கினர். இறுதியில், இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்து மிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. 


செல்லூர் ராஜூவின் ‛செக்’


‛பாஜக காக்கா கூட்டம்... பதவிக்கு ஓடும் அண்ணாமலை...தனித்து நிற்க அதிமுக தயார்’ -செல்லூர் ராஜூ தாக்கு!


பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு மற்றும் பாஜகனை ‛காக்கை கூட்டம்’ என கடுமையாக விமர்சித்த செல்லூர் ராஜூ, ‛முடிந்தால் அனைவரும் தனித்து நிற்கட்டும்... ஓபிஎஸ்-இபிஎஸ் அதற்கு தயார்’ என , பகிரங்கமாக தெரிவித்தார். ‛இது கட்சி கருத்தா... உங்கள் கருத்தா...’ என்று நிருபர்கள் கேட்க, ‛இது கட்சியின் கருத்து தான்...’ என பகிரங்கமாக பேசியுள்ளார் செல்லூர் ராஜூ. கட்சித் தலைமை பச்சைக் கொடி காட்டாமல், இது சாத்யமே இல்லை. இது, இத்தோடு முடியாது, இன்னும் கூட இரு கட்சியின் கூட்டணியில் உரசலை ஏற்படுத்தும். கிட்டத்தட்ட ஜூன் 23 வரும் போது, பாஜகவின் உறவை முறித்துக் கொள்ளும் சூழலில் இது இருக்கும் என்கிற மாதிரியான புரிதலாக தான் இது இருக்கிறது. 


இரு கூட்டம்... ஒரு முடிவு!


ஒரே நாளில், செயற்குழு, பொதுக்குழுவை கூட்டும் அதிமுக தலைமை, முக்கிய முடிவுகளை அங்கு அறிவிக்க உள்ளது. அது, பாஜகவின் கூட்டணியை முறிக்கும் அறிவிப்பாக இருக்கலாம் என்கிறார்கள் அக்கட்சியின் முக்கிய புள்ளிகள். இனியும் அதிமுக, அமைதி அரசியல் செய்யாது; அடித்து ஆடும்... அதற்கு இந்த பொதுக்குழு, செயற்குழு முடிவுகள் துணை நிற்கும் என்றும் கூறுகிறார்கள். பார்க்கலாம்... அதிமுக, தனது அடுத்த இன்னிங்சை தொடங்குகிறதா என்று!