AIADMK: பொதுக்குழு உறுப்பின்பர்களின் வேட்பாளர் தேர்வு படிவத்துடன் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நாளை (06/02/2023) டெல்லி விரைகிறார். 


வேட்பாளர் தேர்வு முறை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது. அதனால் அவைத் தலைவரின் செயலுக்கு நாங்கள் துணைபோகமாட்டோம் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேல்லும் இது குறித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி அதிமுக அவைத் தலைவர் செயல்படவில்லை என ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 


மேலும், அந்த அறிக்கையில்,  இதுபோன்ற சட்டமீறல் செயலுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


அதிமுக வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் எனவும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும், வேட்பாளர் தேர்வு அதிமுகவின் அவைத்தலைவர் நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 


அதைத், தொடர்ந்து அதிமுகவின் தற்போதைய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் வேட்பாளர் தேர்வு படிவத்தினை வெளியிட்டு வாக்களிக்க கோரியிருந்தார். அதில் இன்று அதாவது பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 7 மணிக்குள் தலைமை அலுவலகத்திற்கு வேட்பாளர் தேர்வு படிவம் வந்தடையும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. 


இந்நிலையில் இன்று, மாலை 4 மணியில் இருந்து இறுதி கட்ட ஆலோசனையில் ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஈடுபட்டார். அதன் பின்னர் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையை செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்த ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம், “ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது, சட்டத்துக்கும் நீதிக்கும் புறம்பான செயல்.   உச்ச நீதிமன்ற உத்தரவின் படி நீதிமன்றம் சார்பில் பொதுக்குழுவை கூட்டி, முடிவு எடுக்க நியமிக்கப்பட்ட  அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், இது சம்பந்தமாக அனைவருக்கும் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. எந்த உணர்வுடன் உச்சநீதிமன்றம்  உத்தரவு வழங்கியதோ, அந்த உணர்வை அவர் காயப்படுத்தியுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார் யார்  வேட்பாளராக போட்டி போடுகிறார்கள் என்று தெரிவிக்க வேண்டியது அவைத் தலைவரின் கடமை. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.  இதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.” 


“ஏற்கனவே அதிமுக வேட்பாளராக செந்தில் முருகன் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாத  தென்னரசு பெயரை குறிப்பிட்டு அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என குறிப்பிட்டு இருக்கிறார். இதிலிருந்து அவர் முன் கூட்டியே ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என தெரிகிறது. நடுநிலையாக இருக்க வேண்டிய அவரது செயல் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும். வேறு யாராவது போட்டியிடுவது என்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழியவும் வழி மொழியவும் அத்தகைய வேட்பாளர்கள் போட்டியிட அவைத் தலைவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் இல்லை.” 


”இதர வேட்பாளர்கள் போட்டியிடுவதை அவைத் தலைவர் தட்டிப் பறிக்க முடியாது. முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பொதுக்குழுவில் அதிக வாக்குகளை பெறுபவர்களை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். ஆனால் அவைத் தலைவர் உசேனின் செயல் உச்சநீதிமன்றமே ஆச்சரியப்படும் வகையில் உள்ளது. இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், இதுபோன்ற சட்டமீறல் செயலுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போகமாட்டோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார். 


இந்நிலையில் தமிழ்மகன் உசேன் டெல்லி செல்லவுள்ளதால் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.