சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் சந்தித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தல் பணி குறித்து இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். பின்னர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறியது, ஈரோடு இடைத்தேர்தல் களம் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் வகையில் உள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படையில் தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் தான் மக்கள் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால் ஒட்டுமொத்தமாக வாக்காளர்களை ஒரு இடத்தில் ஆடு பட்டியில் அடைப்பது போல் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார்கள்.


ஒரே இடத்தில் அமர வைத்து துணிவு, வாரிசு போன்ற படங்களை காட்டி மாலையில் அனுப்பி வைக்கிறார்கள். இது ஒரு புது ஃபார்முலாவாக உள்ளது. போகும் போது சாப்பாடையும் கொடுத்து அனுப்புகிறார்கள். திமுக இதுபோன்ற ஃபார்முலாவை செய்து வருகிறது இப்போது இந்த ஃபார்முலா இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. 



உத்திரபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பிற மாநிலங்களில் போன்ற இடங்களில் இடைத்தேர்தல் நடந்தாலும் திருமங்கலம் ஃபார்முலா பேசப்பட்டது. ஆனால் தற்போது ஈரோடு கிழக்கு ஃபார்முலா பேசப்படுகிறது. ஆனால் இப்போது ஈரோடு கிழக்கு ஃபார்முலா மிஞ்சி விட்டது. சாமியான ஃபார்முலா ஈரோட்டில் நடக்கிறது. திராவிட மாடல் ஆட்சி என இனி சொல்லாமல் சாமியானா மாடல் ஆட்சி என கூறுங்கள். இப்படி வாக்கு கேட்பது முறையா? நியாயமா? என்றார்.


நாங்களும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களை சந்தித்தோம். இப்படியா நடந்து கொண்டோம் நீங்களும் ஓட்டு கேளுங்கள், நாங்களும் ஓட்டு கேட்கிறோம் வாக்காளர்கள் தானே ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள், இது தவறான முடிவு ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறோம். நீதிமன்றத்திலும் தெரிவித்து இருக்கிறோம், நியாயமான முறையில் சத்தியமான முறையில் இந்த தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி வாகை சூடும்.


உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரை விமர்சித்து வந்தார். இப்போது அமைச்சரான பின்னரும் அதிகமாக விமர்சிக்கிறார். அவர் வயது என்ன? அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் வயது என்ன? அவர் விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்டத்தில் இருக்கக்கூடிய தலைவர்கள் தக்க பதிலடி தருவார்கள். செங்கல் வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின் அரசியல் நடத்துகிறார்.


உதயநிதி வெட்கப்பட வேண்டும்:


உண்மைக்கும் நேர்மைக்கும் நாணயத்திற்கும் எதிராக இருக்கும் தி.மு.க.விற்கு ஓட்டு கேட்கும் உதயநிதி ஸ்டாலின் தான் வெட்கப்பட வேண்டும். ஊர்ந்து வந்தார் தவழ்ந்து வந்தார் என்றும் பதவி பெற்றார் என்றும் கூறுகிறார். உதயநிதி ஸ்டாலின் கவர்னர் மாளிகையில் ராஜ் பவனில் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதலமைச்சரின் நண்பரின் காலில் விழுந்து உதயநிதி ஸ்டாலின் வணங்கினார். அவர் தொழிலதிபர் காலில் ஒரு அமைச்சர் விழுகிறார் என்றால் இதற்கு விளக்கத்தை உதயநிதி ஸ்டாலின் சொல்ல வேண்டும்.