அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளின் விசாரணை ஏப்ரல் 11-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மோதல் உச்சத்திற்கு சென்ற நிலையில், கடந்த மாதம் பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த கடந்தாண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மனோஜ்பாண்டியன் வழக்கு தொடர்ந்திருந்தார்.


அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவரது மனுவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவில், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்கு பின் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ளள வழக்கு செல்லாததாகிவிட்டது என்றும், இதனால் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.


இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம்,ஜே.சி.டி. பிரபாகரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், இந்த மனு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பாக தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தது முதல் இ.பி.எஸ். தரப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் இடைத்தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தோல்விகள் காரணமாகவும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் தரப்பினரின் வியூகம் காரணமாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.


நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாகவும், அ.ம.மு.க. பொதுச்செயலாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய வாய்ப்பு வந்தால் இணைந்து பணியாற்றுவேன் எனறு கூறினார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா - தினகரன் கூட்டணி இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் எடப்பாடி பழனிசாமியினர் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகியுள்ளனர். 


மேலும் படிக்க:விருப்பப்படி விடுப்பு, பணியிடமாற்றம்.. கழிவறையுடன் ஓய்வறை.. பெண் காவலர்களுக்கு 9 திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு


மேலும் படிக்க: TN Rain Alert: ஹாப்பி நியூஸ் மக்களே.. அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..