அதிமுகவுக்கு ஆதரவாக சவுக்கு சங்கர் பேசியதால் கைது செய்யப்பட்டார் என நடிகை விந்தியா குற்றச்சாட்டு. தாய் வீட்டைப் பற்றி அமைச்சர் ரகுபதி தவறாக பேசுகிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவை கதிகலங்க வைத்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என சூளுரை 

இயக்கம் பிளவு படாது


காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் நடிகை விந்தியா சுவாமி தரிசனம் மேற்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளரை சந்தித்து அவர் பேசுகையில், “அமைச்சர் ரகுபதியின் ஆரம்ப அரசியல் ஆரம்பித்தது அதிமுகவில்தான். இங்கிருந்து போனவர் தாய் வீட்டை பத்தி தப்பா பேசுவது தவறு. திமுக போல் ஊழல் ஆட்சி இங்கு நடக்கவில்லை, இந்த இயக்கம் மக்களுக்காக உழைத்தது. இந்த இயக்கத்தை பற்றி பேச யாருக்கும் அருகதை கிடையாது. இந்த இயக்கம் பிளவு படாது, தேர்தலுக்குப் பின்பு எவ்வளவு பலமாக இருக்கிறது எவ்வளவு பெரிய கட்சியாக வரும் என்பதும் தெரியும். திமுகவை கதி கலங்க வைத்து ஆட்சியை பிடிப்பதை இரண்டு வருடத்தில் பார்க்க போகிறோம் ‌.‌


அதிகமாக உழைத்திருக்கிறோம்


அவர்களுடைய பாவம் ஏறிக்கொண்டே சென்றால் 10 ஆண்டுகள் கூட இந்த ஆட்சி தாங்காது. வாக்குப்பதிவு குறைவாக இருக்கிறது நாம் யாருக்கு ஓட்டு போட்டாலும் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வராது என சோர்ந்து போய்விட்டார்கள். பலர் வெளியே வந்து ஓட்டு போடவில்லை. மக்கள் ஆட்சி மாற்ற வேண்டும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் பாருங்கள் எப்பொழுது வந்தாலும் வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கும். 2021 விட அதிகமாக உழைத்திருக்கிறோம் . மக்களுடைய எழுச்சி நன்றாக இருந்தது 

கோயில் வாசலில் கூட கஞ்சா விற்கிறார்கள்


சவுக்கு சங்கர் வழக்கு விசாரணையில் இருக்கிறது இப்பொழுது பதில் கூற முடியாது. அவருக்கு தேவைப்படும் ஆதரவில் உண்மை இருந்தால் கண்டிப்பாக நாங்கள் துணை நிற்போம்.  தமிழ்நாடு முழுவதும் கஞ்சா வழக்கில் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என மக்களுக்கு தெரியும். நேர்மையாக உண்மையாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றால் முதலில் யாரை விசாரிக்க வேண்டும். திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் யாருக்கு நெருக்கமாக உதயநிதிக்கும் அவருடைய குடும்பத்திற்கும் நெருக்கமாக இருந்தார். சவுக்கு சங்கரை தான் விசாரிக்க வேண்டுமா ? கோயில் வாசல், ஸ்கூல் முன்னாடி கஞ்சா விற்று கொண்டிருக்கிறார்கள்.  தனியார் தொலைக்காட்சியில் சவுக்கு சங்கர் பேட்டி கொடுக்கிறார். அவர் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார் எனவே அவரை கைது செய்து இருக்கிறார்கள்‌. பொறுத்திருந்து பார்ப்போம் உண்மை உலகிற்கு தெரியும் யார் தவறு செய்தார்களோ அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.

 சினிமா திமுக ஆட்சியில் சுயமாக இயங்காது 


சினிமாவில் ஜாதி அரசியல் குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசுகையில் , எனக்கு ஜாதி பற்றியும் மதத்தை பற்றி பேச விருப்பமில்லை. நான் புரட்சித்தலைவர் வழியில் வந்தவள். திமுக ஆட்சி காலத்தில் திரைப்படத்துறை முறையாக செயல்படாது. அதிமுக ஆட்சியில் எந்த திரைப்படம் வெளியாக வேண்டும் எந்த திரையரங்கில் வெளியாக வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யாது. ஆனால் இப்பொழுது திமுக ஆட்சியில் யார் படம் எடுத்தாலும், ரெட் ஜெயின் மூவிஸ் மற்றும் சன் பிக்சர் நிறுவனத்திற்கு தான் விற்க வேண்டும் இதுதான் உண்மை நிலவரம். திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் சினிமா சுயமாக இயங்காது சினிமா மட்டும் இல்லாமல் எந்த வியாபாரமும் நிம்மதியாக சுதந்திரமாகவும் இயங்காது என தெரிவித்தார்.