இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பொன்முடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 


கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பு வகித்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.  இதனால், 2011ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் விசாலாட்சி மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், கடந்த 2016ம் ஆண்டு இருவரையும் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு 2023 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


இதனை தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்தது. இதற்கு முன்,  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சராக இருந்த பொன்முடி அமைச்சர் பதவி இழந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். இதனை தொடர்ந்து அவருக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார். ஆனால் தண்டனை நிறுத்து வைக்கப்பட்டுள்ளதே தவிர அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வரவில்லை என கூறி பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார்.


இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஆளுநர் என்ன செய்கிறார் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.


பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்கள். தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என எதன் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.






நாளைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்காவிட்டால், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் ஒரு நாள் கெடு விதித்ததையடுத்து இன்று பிற்பகல் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ்நாடு  முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பதவியேற்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணத்துடன் ஆளுநர் எந்த செயலையும் செய்யவில்லை என ஆளுநர் தரப்பில் அட்டர்னி ஜென்ரல் உச்சநீதிமன்றதில் தெரிவித்துள்ளார்.




மீண்டும் அமைச்சராக பதவியேற்கு பொன்முடிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வி துறையை ஒதுக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொன்முடி பதவி இழந்த நிலையில் அவர் வகித்து வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது உயர் கல்வித்துறை பொன்முடிக்கு ஒதுக்கப்படும் நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.