தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவோர், நன்கொடையாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
இந்த விருதுகள், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைத்தவர்களை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படுகின்றன.
விருதுகளின் வகைகள் மற்றும் தகுதிகள்
ஆண்டுதோறும் பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்றுச் சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், மற்றும் 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது.
இவர்களுக்குப் பரிசாக தலா ரூ.1 லட்சம், ரூ.10,000 மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும். இவ்விருதுக்கு, விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் படைத்த சாதனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இதுதவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர்/ ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம், மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்களுக்கும் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.10,000-க்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இவர்களுக்கான விருதுக்கு முந்தைய இரண்டு ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
விண்ணப்பிப்பதற்கான காலம்
2024-2025 ஆம் ஆண்டிற்கான (காலம் 01.04.2021 முதல் 31.03.2024 வரை) தலைசிறந்த விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர்/உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரிடமிருந்தும்.
2025-2026 ஆம் ஆண்டிற்கான (காலம் 01.04.2022 முதல் 31.03.2025 வரை) தலைசிறந்த விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர்/உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரிடமிருந்தும்.
மேலும், 2024-2025 ஆம் ஆண்டிற்கான (காலம் 01.04.2022 முதல் 31.03.2024 வரை) விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம்; மற்றும் ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோரிடமிருந்தும்.
2025-2026 ஆம் ஆண்டிற்கான (காலம் 01.04.2023 முதல் 31.03.2025 வரை) விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம்; மற்றும் ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோரிடமிருந்தும் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி மற்றும் விதிமுறைகள்
- தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும், தமிழ்நாட்டிற்காக 2 முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு, இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர்.
- இந்தியாவின் சார்பாகக் கலந்து கொண்ட, தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.
- இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது.
- ஒருவர் காலமானாலும் இவ்விருது வழங்கப்படும்.
- மேற்குறிப்பிட்டுள்ள ஆண்டுகள் மட்டுமே விருதுக்காகக் கருத்தில் கொள்ளப்படும்.
- விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களைச் சான்றொப்பத்துடன் இணைக்க வேண்டும். உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- இவ்விருதுக்காகப் பரிந்துரை செய்யப்படுபவர்கள் மேற்குறிப்பிட்ட விதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கருத்தில் கொள்ளப்படும் விளையாட்டுப் போட்டிகள்:
- ஒலிம்பிக் போட்டிகள்
- சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் காமன்வெல்த் வாகையர் போட்டிகள் (4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டுதோறும்)
- ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்
- சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் உலக வாகையர் போட்டிகள் (4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டு தோறும்).
- தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
- தேசிய விளையாட்டுப் போட்டிகள்.
- மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு இணையம் நடத்தும் தேசிய வாகையர் போட்டிகள்.
- விளையாட்டு நன்கொடையாளர் ஒரு ஆண்டிற்கு ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட நன்கொடை அளித்தவர் மட்டும்.
- அழைப்புப் போட்டிகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் கருத்தில் கொள்ளப்படாது.
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் பதக்கமும் அதாவது உலகக் கோப்பை, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் 3 இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். இப்போட்டிகளில் பெற்ற வெற்றிகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்
விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு கழகம் / மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் / முதன்மை கல்வி அலுவலர் / முதன்மை உடற்கல்வி ஆய்வர் (ஆடவர்/மகளிர்) மூலமாகவும், பிற பிரிவினர் (விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர் / நிர்வாகி / ஆதரவளிக்கும் நிறுவனம், நன்கொடையாளர், ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி) உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர் அவர்களுக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.
விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் "முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்" என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை - 600 003 என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தலைமை அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 11, 2025 மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 7401703459 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.