திருக்கடையூர் கோயிலில் நடைபெற்ற சகோதரர் ராஜாவின் பீமரத சாந்தி விழாவில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் கலந்துக்கொண்டார்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக இது விளங்குகிறது.
மார்க்கண்டேயர் உயிரை காப்பாற்றி சிவபெருமான்
புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்ததாகவும். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் மனித இனம் இறப்புகள் இன்றி பூமியின் பாரம் அதிகரிக்க அதனை தாங்க முடியாமல் பூமா தேவி சிவனிடம் வேண்டுகோள் வைக்கை பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தாக வரலாறுகள் கூறுகின்றன. இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60, 70, ,80 கல்யாணம் ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் பல சிறப்புகள்
அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து, சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
ராஜா பீமரத சாந்தி விழா
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வருகை தந்தார். அவரது சகோதரர் ராஜாவுக்கு 70 வயது பூர்த்தியை முன்னிட்டு ராஜா மற்றும் அவர் மனைவி சந்திரகலாவதி ஆகியோருக்கு பீமரத சாந்தி திருமணம் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் உறவினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோயிலுக்கு வந்த ஓ. பன்னீர்செல்வத்திற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயில் உள்ள பல்வேறு சன்னதிகளில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்பொழுது கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். சிரித்த முகத்துடன் அவரும் நின்று செல்பி எடுத்துக் கொண்டார். பல பக்தர்கள் பன்னீர்செல்வத்தை பார்த்து இன்முகத்துடன் வணக்கம் செய்தனர்.
தொடர்ந்து திருமண வைப விழாவில் தம்பதிகளுக்கு கலசபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற வைபவத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது சகோதரருக்கு ருத்ராட்ச மாலை அணிவித்தார். தம்பதிகள் மாலை மாற்றிக்கொண்ட வைபவம் நடைபெற்றது. அதனையடுத்து கள்ளவாரண விநாயகர், அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.