மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட வாகனம் பறிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த டிஎஸ்பி காவல்துறையில் பல்வேறு உயர் அதிகாரிகள் குறித்து குற்றச்சாட்டை தெரிவித்தார். அது தமிழகம் முழுவதும் காவல்துறை மட்டுமின்றி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி தற்போது வரை பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது.
மீண்டும் செய்தியாளர்களிடம் ஆதங்கம்
இந்த சூழலில் மீண்டும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், என் மீது முந்தைய காலங்களில் நடந்த பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அப்போது நான் தவறு செய்து இருந்தால் என்னை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை transfer செய்கிறார்கள். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கைப் பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். இதுதான் காவலர்களின் நிலை. ஒரு ஒரு வருடத்திற்கும் ஒரு ஊதிய உயர்வு உண்டு. எனது ஒன்பது ஊதிய உயர்வை தடுக்கின்றனர்.
நேர்மையான அதிகாரிகளை விட மாட்டார்கள்
நான் நேர்மையான அதிகாரி. பல பிரச்சினைகளை சந்தித்துள்ளேன். போலீசார் நேர்மையான அதிகாரிகளை விட மாட்டார்கள், குற்றச்சாட்டுகளை வைக்கத்தான் செய்வார்கள். என் மீது பாலியல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். ஆனால், தற்போது வரை ஏன் என்னை சஸ்பெண்ட் செய்யவில்லை? கடந்த 11 மாதமாக இரவு பகலாக நேர்மையாக வேலை செய்து வருகிறேன். தன்னை விசாரிக்காமல் எப்படி டிஐஜி சஸ்பென் செய்ய பரிந்துரைக்கலாம்? நான் அனைத்திற்கும் தயாராக உள்ளேன்.
மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தவறான தகவல் என தெரிவிக்கிறார். உங்களால் ஏதாவது பதில் சொல்ல முடிந்ததா..! நான் ஓடி ஒளியவில்லை. நான் பதில் சொல்கிறேன். எனது தந்தைக்கு சென்னையில் ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. இந்த செய்திகளை பார்த்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது தொடர்பான மெசேஜ் மாவட்ட எஸ்பி இடம் தெரிவித்துள்ளேன். ஆனால் அவர் தற்போது வரை எனக்கு பதில் அளிக்கவில்லை. நான் குடும்பத்துடன் சென்னை சென்று எனது தந்தையை பார்க்க வேண்டும்.
என்னைப்பற்றி எந்த புகாரும் இல்லை
இது தொடர்பான பிரச்சனை டிஐஜிக்கு தெரியும். ஆனால் தற்போது வரை என்னை விசாரிக்கவில்லை. 11 மாதம் நான் பணி செய்து வருகிறேன். ஆனால் இதுவரை என்னைப் பற்றி யாரும் புகார் அளிக்கவில்லை. டிஎஸ்பி விஷ்ணு பிரியா நாமக்கல்லில் மறைந்தார். அந்த வழக்கை விசாரணை செய்ததில் நானும் ஒரு காவலராக இருந்தேன். அடுத்து விஜயகுமார் ஐபிஎஸ் இறந்தார். அவரிடம் நான் வேலை செய்ததில்லை ஆனால் அவர் என்னை தங்கம் என தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் ஏன் இன்னும் தலையிட விரும்பவில்லை
தமிழக முதலமைச்சர் ஏன் இன்னும் எனது பிரச்சனையில் தலையிடவில்லை என எனக்கு தெரியவில்லை. தமிழக டிஜிபி ஏன் என்னை அடைத்து இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவில்லை. நான் காவல்துறையில் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சில பேரின் சுயநலத்தால் தான் எங்களை போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையானது நான் காவல்துறையில் பணியாற்ற கூடாது. எனக்கும் சட்டம் தெரியும். தற்போது நான் பேசுவதால் என்ன விளைவுகள் வரும் எனக்கு தெரியும். என் மீது ஏணியை தூக்கி அடிக்கிறீர்கள்.
எனது உயிருக்கு ஆபத்து
எனது தந்தை உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார். அப்போதும் நான் இங்கு நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன். என் மீது தவறு இருந்தால் தூக்கில் போடவும். காவல்துறையில் ஸ்டார் முக்கியமில்லை. மன நிம்மதி மட்டுமே முக்கியம். எனது குடும்பத்திற்கு யார் பாதுகாப்பு. நான் இறந்து விட்டால் மலர் வளையம் வைத்துவிட்டு கண்ணீர் விட்டு சென்று விடுவீர்கள். ஆனால், நான் கடைசிவரை பிரச்சினைகளை சந்திப்பேன். மற்ற காவலர்களை போன்று எவ்வித தவறான முடிவும் எடுக்க மாட்டேன். டிஜிபி சங்கர் ஜிவால் நல்ல அதிகாரி. ஆனால் தற்போது வரை தன்னை கூப்பிட்டு விசாரிக்கவில்லை. மீண்டும் பதிவு செய்கிறேன். எனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை.தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக எனது பிரச்சனையில் விசாரிக்க வேண்டும்.