மயிலாடுதுறை அருகே வீட்டில் இருந்து மூன்று சாரை பாம்பு, ஒரு நான்கு பாம்பு உட்பட நான்கு பாம்புகளை ஒரே நேரத்தில் பிடித்து பாம்பு பாண்டியன் பத்திரமாக வனப்பகுதியில் விட்டுள்ளார்.


வசிப்பிடங்களை இழந்த உயிரினங்கள் 


பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷத்தன்மை, இதனால் பலரும் பாம்பு கடித்து உயிரை இழக்கும் சம்பவம் காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வுகளில் ஒன்று. உலகம் தோன்றிய நாள் முதல் பரினாம வளர்ச்சியும் படிப்படியாக காடுகள் அழிக்கப்பட்டு மனித வாழ்விடம் அமைப்பதற்காக கட்டிடங்கள் உருவாகி காடுகளின் அளவு குறைய தொடங்கியது. இதன் காரணமாக காடுகளில் வாழ்ந்த ஜீவராசிகள் அவர்களின் வழி தடம் தேடி நகர தொடங்குகின்றன. 




ஆக்கிரமிக்கப்பட்ட வாழ்விடம் 


அவ்வாறு விலங்குகள் தங்கள் வாழ்விடத்தை அவர்கள் வாழ்ந்த வழி தடங்களில் செல்ல தொடங்குகின்றன. அவ்வாறு அவர்கள் செல்லும் பாதைகளில் தற்போது மனிதர்களின் ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டிடங்கள், தோட்டங்கள் என அதிகரித்ததன் விளைவாக விலங்குகளின் சீற்றத்திற்கு மனிதர்கள் ஆளாகும் சூழலை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அதற்கு உதாரணமாக யானைகளால் மனிதர்கள் தாக்கப்படுவதை வாழை, கரும்பு போன்ற தோட்டங்களும், வயல்களும் சேதம் படுத்தும் நிகழ்வும், இதுபோன்று சிறுத்தை, கரடி, புலிகள் போன்ற விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படும் நிகழ்வும் நடந்தேறும் செய்திகளை நாம் அன்றாடம் செய்தி ஊடகங்கள் வழியை அறிந்து வருகிறோம்.




வீட்டில் புகுந்த பாம்புகள் 


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் 45 வயதான பாண்டியன். இவர் சிறுவயது முதலே அவ்வப்போது அவர்வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்த பாம்புகளை லாவகமாக பிடித்து பாதுகாப்பான வனப்பகுதியில் விட்டு வருகிறார். இதுவரை 5000 க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளார். இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் கருவாழக்கரை மேலையூர் மெயின் ரோடு வசித்து வரும் ராதாகிருஷ்ணன் என்பவர் வீட்டில் பாம்பு நடமாட்டம் இருப்பதை கண்டுள்ளனர். அதனை அடுத்து பாம்பு பிடி வீரரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் கொடுத்து அவரை அழைத்துள்ளனர். 




வீட்டில் இருந்த நான்கு பாம்புகள் 


அதனைத் தொடர்ந்து உடனடியாக பாம்பு பாண்டியன் வந்து ராதாகிருஷ்ணன் வீட்டில் பாம்பு நடமாட்டம் இருந்ததாக கூறி இடத்தில் பாம்பை தேடியுள்ளார். அப்போது, அவரது வீட்டில் அடிக்கி வைக்கப்பட்டிருந்த பழைய ஓடுகளுக்கு இடையே பாம்பு இருப்பது தெரியவர அதனை அவர் பிடிக்க முற்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்து அடுத்தடுத்து நான்கு பாம்புகள் வந்துள்ளது. இதனை கண்டு சுதாரித்து கொண்ட பாம்பு பாண்டியன் 7 அடி நீளம் கொண்ட மூன்று சாரை பாம்புகள் மற்றும் 5 அடி நீளம் கொண்ட ஒரு நல்ல பாம்பு என மொத்தம் 4 பாம்புகளை அங்கிருந்து பத்திரமாக பிடித்து சாக்கு பையில் போட்டு பாதுகாப்பாக கொண்டு வனப்பகுதியில் விட்டுள்ளார்‌.ஒரு பாம்பின் நடமாட்டம் தான் உள்ளது என எண்ணிய ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் நான்கு பாம்பு பிடிப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.




வனத்துறையில் பணி வழங்க கோரிக்கை 


இந்நிலையில் இதுபோன்ற வீடுகளுக்குள் புகும் பாம்புகளை வனத்துறையினர் பாம்புகளை பிடிக்க பயிற்சி பெற்ற வனக்காவலர் மூலம் பாதுகாப்பாக உயிருக்கு அச்சுறுத்தல் இன்றி அவற்றை பிடித்து வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவது வழக்கம். ஆனால் சீர்காழி வனத்துறையினர் அவ்வாறு அந்த பணிகளை செய்ய ஊழியர்கள் இல்லாத சூழலில் பொதுமக்களை சேர்ந்த ஒருவரை அவர் உயிருக்கு எவ்விதமான பாதுகாப்பும் இன்றி சட்டத்திற்கு புறம்பாக பாம்புகளை பிடிக்க அனுமதி அளித்து வருவதாகவும், இனிவரும் காலங்களிலாவது, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வீடுகளில் புகுந்து மக்களை அச்சுருத்தி வரும் கண்ணாடி விரியன், கட்டு விரியன், எண்ணெய் விரியன், நல்ல பாம்பு உள்ளிட்ட கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகளை தனது உயிரை பணயம் வைத்து திறமையால் லாவகமாக பிடித்து வரும் பாம்பு பாண்டியனுக்கு வனத்துறையில் பணி வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.