மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் தமிழிசை மூவர் மணிமண்டபம் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை அரங்கத்தையும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழிசை மூவர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அதற்கு பின்பு வந்த ஆட்சியாளர்கள் இந்த மணிமண்டபத்தை சீரமைக்காததால் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது.





இந்நிலையில் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று 95 சதவீத பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.  இந்த மணிமண்டபம் வரும் காலங்களில் சீர்காழி பகுதியில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதை போல் ஆண்டுதோறும் தமிழிசை மூவர்களின் நினைவை போற்றும் வகையில் தமிழிசை மூவர் விழா முறைப்படி நடக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படும்போது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அண்மையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் செய்தியாளர் தாக்கப்பட்ட போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு  உத்தரவிட்டதன் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.





ஜனநாயகத்தில் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகையை பொறுத்தளவு  முத்தமிழ் அறிஞர் கலைஞர் எப்படி பாதுகாத்தாரோ அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக, உறுதியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மேலும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த தனி சட்டம் கொண்டு வருவது பற்றி செய்தியாளர்களின் கோரிக்கை குறித்த கேள்விக்கு, அதற்கு ஒன்றிய அரசிடம் தான் வழிமுறைகள் உள்ளது. இருந்த போதிலும் தமிழக அரசு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குறித்து சட்டத்தை செம்மை படுத்தி, எதிர்காலத்தில் பத்திரிக்கையாளர்கள் இதுபோன்று தாக்கப்படமால் இருக்க உரிய வழிகளை ஏற்படுத்துவோம் என்றார்.  





மேலும் அவர் கூறுகையில், கவிஞர் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்ததை அடுத்து செய்தித்துறை சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.  தமிழகத்தில் சுதந்திரபோராட்ட வீரர்கள், தமிழ்மொழி தியாகிகள், மக்களுக்காக உழைத்த தலைவர்களின் சிலைகள் அமைக்கபப்ட்டு வருகிறது. சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பு பணி மற்றும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை நினைவு அரங்கம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தேன். பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணியில் மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் ஒருசில மாற்றம் செய்யலாமா என்று ஆலோசனை செய்கிறோம். மக்கள் பயன்பாடு மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் இந்த அரங்கை பயன்படுத்தும் நோக்கில்  அமைக்கப்பட்டு வருகிறது.





வணிக நிறுவனங்களில் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டுமென்று சட்டம் இருக்கிறது. வரும் 2-ம் தேதி மக்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். தொடர்ந்து பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ்வளர்ச்சித்துறை, தொழிலாளர் துறைசார்பில் ஆய்வு செய்து தமிழில் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தில்லையாடி வள்ளியம்மை நினைவு மணிமண்டபம் வரும் நிதியாண்டில் சீரமைப்பதற்கு நிதிநிலைக்கு ஏற்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவ்வாய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி , மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம்,  மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார்,  சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ. யுரேகா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.