அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தை நம்பி வந்த பசியுடன் வந்த குழந்தைகளுக்கு உணவு வழங்காததால் அவர் ஏமாற்றம் அடைந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதையும், அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிப்படையாமல் இருப்பதையும், பள்ளிகளில் அவர்களின் வருகையை கணிசமாக அளவு அதிகரிக்க வைப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு தமிழ்நாட்டில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இத்திட்டம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2022 -ம் ஆண்டு மே 08 தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காலை உணவுத் திட்டம் தொடர்பான முதல் அறிவிப்பு, விதி 110-இன் கீழ் வெளியிடப்பட்டது. 




அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-ம் முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நோக்கில் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக, முதல் கட்டமாக 33.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 1,545 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, இதன் மூலம் 1,14,095 மாணவர்கள் பயன்பெற்றார்கள். அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.




அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 25 -ம் தேதி அன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் அருகே உள்ள மாமாகுடி ஊராட்சியை சேர்ந்த அப்பராசப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களின் நலன்கருதி வழங்கப்படும் காலை உணவு, திடீரென வழங்காமல் இருந்துள்ளனர். இதனை அறியாத அப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சின்ன சிறு குழந்தைகள் காலை உணவை பள்ளியில் உண்ணலாம் என பசியோடு வந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


மாணவனை கடத்தி சென்ற ஆசிரியை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்.. அதிரடி காட்டிய போலீசார்..


இதுகுறித்து தகவல் அறிந்த மாமாகுடி ஊராட்சியின் துணைத்தலைவர் ஜெயந்தி செந்தில் வேலன் (திமுக) அருகிலுள்ள உணவகத்தில் தனது சொந்த செலவில் உணவு வாங்கிவந்து தந்துள்ளார். மேலும் இது குறித்து அவரது கணவர் செந்தில் வேலன் செல்போனில் இதனை பதிவு செய்து. பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்காமல் இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரால பரவி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், கண்டனங்களும் எழுந்து வருகிறது.