மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் காலநிலையில் பெரும் மாற்றம் நிலவி வருகிறது. கோடைக்காலம் நெருங்கி வரும் வேளையிலும், எதிர்பாராத விதமாகப் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு ஒருபுறம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தாலும், மறுபுறம் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Continues below advertisement

இயல்பு வாழ்க்கையை முடக்கிய பனிமூட்டம்

மயிலாடுதுறை நகர் உட்பட செம்பனார்கோவில், மணல்மேடு, குத்தாலம், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. கடந்த ஒரு வார காலமாகவே இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வந்த நிலையில், இன்று அதிகாலை தொடங்கிய பனிப்பொழிவின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக இருந்தது.

குறிப்பாக, அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நீடித்த இந்தப் பனிமூட்டத்தால், சாலையின் அடுத்த முனையில் இருக்கும் பொருட்கள் கூடத் தெரியாத அளவிற்குப் புகை மண்டலம் சூழ்ந்தது போல் காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பணிகளைத் தொடங்க முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் பால் வியாபாரிகள் கடும் குளிரினால் அவதிக்குள்ளாகினர்.

Continues below advertisement

திணறிய வாகன ஓட்டிகள்

கடும் பனிப்பொழிவு காரணமாகப் போக்குவரத்துப் பெருமளவில் பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை - சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்புறச் சாலைகளில் சென்ற பேருந்துகள், லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின. முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டபடியே வாகனங்கள் சென்றாலும், எதிரே வரக்கூடிய வாகனங்கள் மிக அருகில் வரும் வரை தெரியாத நிலை நீடித்தது. இதனால் விபத்துகளைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை மிகக் குறைந்த வேகத்திலேயே இயக்கிச் சென்றனர். 

வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் பனிப்பொழிவு காரணமாகத் தாமதமாகவே இலக்கை அடைய முடிந்தது. "முன் எப்போதும் இல்லாத அளவிற்குப் பனி பெய்ததால், சாலையே தெரியவில்லை. முகப்பு விளக்குகள் கூடப் பனிமூட்டத்தைத் ஊடுருவ முடியாமல் திணறின" என வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்தனர்.

வயல்வெளிகளில் வெள்ளைப் போர்வை

கிராமப்புறப் பகுதிகளில் பனியின் தாக்கம் இன்னும் ரம்மியமாகவும் அதே சமயம் கடுமையாகவும் இருந்தது. பரந்து விரிந்த வயல்வெளிகள் அனைத்தும் பனியினால் மூடப்பட்டு, ஏதோ ஒரு மலைப்பிரதேசத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. மரங்கள், செடிகள் மற்றும் மின் கம்பிகளில் பனித்துளிகள் கோர்க்கப்பட்டு, இயற்கை எழிலுடன் காட்சியளித்தாலும், கடும் குளிரால் அதிகாலையிலேயே வயலுக்குச் செல்லும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

உளுந்து விவசாயிகளுக்குப் ‘பனி’ப்பிரசாதம்

பொதுமக்களுக்குச் சிரமத்தைக் கொடுத்தாலும், மாவட்டத்தின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளுக்கு இந்தப் பனிப்பொழிவு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா அறுவடைப் பணிகள் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவடைந்துள்ளன. அறுவடைக்குப் பிந்தைய ஈரப்பதத்தைப் பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் வயல்களில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை அதிக அளவில் விதைத்துள்ளனர்.

பயறு வகை பயிர்களின் ஆரம்பகால வளர்ச்சிக்குக் காற்றின் ஈரப்பதமும், மிதமான பனிப்பொழிவும் மிக அவசியமானதாகும். "இப்போது பெய்து வரும் இந்தப் பனிப்பொழிவு உளுந்துப் பயிர்கள் செழித்து வளர்வதற்கும், செடிகளில் பூக்கள் அதிகமாகப் பிடிப்பதற்கும் பெரிதும் உதவும். இது பயிர்களின் மகசூலை அதிகரிக்கும் இயற்கையான ஊட்டம்" என்று விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ நிபுணர்களின் அறிவுரை

காலநிலை மாற்றத்தால் நிலவும் இந்தக் கடும் குளிரும் பனியும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குச் சுவாசப் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதிகாலையில் வெளியே வருபவர்கள் போதிய கம்பளி ஆடைகளை அணிய வேண்டும் என்றும், நிலவும் பனிமூட்டத்தால் சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.