மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தின் கனவுத் திட்டமான புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கிறார். ஒருபுறம் திறப்பு விழா உற்சாகம் நிலவினாலும், மறுபுறம் பேருந்து நிலையத்திற்கு ‘கவிச்சக்கரவர்த்தி கம்பர்’ பெயரைச் சூட்ட வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் மாவட்டம் முழுவதும் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Continues below advertisement

ரூ. 24 கோடியில் நவீன வசதிகள்

மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மணக்குடி கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. சுமார் 5,183 சதுர மீட்டர் பரப்பளவில், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக இந்த நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 28 பேருந்துகள் வந்து நிற்கும் வகையிலும், நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் தடையின்றி வந்து செல்லும் வகையிலும் நவீனக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் அமரும் வசதி, வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் என அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

தாமதமும் சர்ச்சைகளும்

இந்தப் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கிய காலத்திலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் நிழலாடி வந்தன. கட்டுமானப் பணிகளில் தரம் குறைவாக இருப்பதாகப் பொதுமக்கள் தரப்பிலும், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் தொடர் புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாகவும், சில தொழில்நுட்பக் காரணங்களாலும் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா தொடர்ந்து தள்ளிப்போய் வந்தது. மக்களின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்று (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் இதனைத் திறந்து வைப்பது உறுதியாகியுள்ளது.

Continues below advertisement

பாஜகவின் ‘கம்பர்’ பெயர் கோரிக்கை

இந்தச் சூழலில் தான், புதிய பேருந்து நிலையத்திற்குப் பெயர் சூட்டுவது தொடர்பாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்ட பாஜக துணைத்தலைவர் 'மோடி' கண்ணன் தலைமையில், நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் போஸ்டர்களில், தமிழ் இலக்கியத்தின் சிகரமான கம்பராமாயணத்தை இயற்றிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டி, அவரது பெயரையே இந்தப் பேருந்து நிலையத்திற்குச் சூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசுக்குக் காரசாரமான கேள்விகள்

பாஜகவினர் ஒட்டியுள்ள அந்தப் போஸ்டர்களில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. "தமிழின் மூத்த இலக்கியமான கம்பராமாயணத்தைப் படைத்த, இந்த மண்ணின் மைந்தர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெயரைச் சூட்ட தமிழக அரசுக்கு மனமில்லையா? எந்நேரமும் தமிழ், தமிழ் என்று முழங்கும் திராவிட மாடல் அரசுக்கு, ஒரு தூய தமிழ்ப் பெயரை வைக்க என்ன தயக்கம்?" என கேள்விகளை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

இந்த போஸ்டர் விவகாரம் சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. கம்பர் பிறந்த தேரழுந்தூர் இந்த மாவட்டத்திலேயே அமைந்துள்ளதால், அவரது பெயரை வைப்பது பொருத்தமாக இருக்கும் என ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவிக்கும் வேளையில், அரசின் திட்டங்களுக்குப் பெயர் வைப்பதில் அரசியல் செய்யக்கூடாது என மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைக்கும் நிகழ்வையொட்டி, மணக்குடி பேருந்து நிலைய வளாகத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர். அதே வேளையில், பாஜகவின் போஸ்டர் போராட்டத்தால் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மக்களின் பல ஆண்டு காலப் போக்குவரத்துப் பிரச்சினைக்கு இன்று தீர்வு காணப்பட உள்ள நிலையில், இந்த 'பெயர் சூட்டும்' அரசியல் மோதல் விழாவிற்கு இடையே ஒரு நிழல் யுத்தமாக உருவெடுத்துள்ளது. அரசு இது குறித்து என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.