சட்டச் சிக்கல்களை போக்கும் சட்டைநாதர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.
கோயிலின் மேலும் பல சிறப்புகள்
இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.
நாள்தோறும் படையெடுக்கும் விஐபிகள்
இத்தகைய பல சிறப்புகள் கொண்ட இக்கோயில் பல்வேறு வேண்டுதல்களுடன் நாள்தோறும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். இந்நிலையில் இக்கோயிலுக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வந்து வழிபாடு மேற்கொண்டார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேல் சட்டை அணியாமல் வழிபாடு செய்த அமைச்சர் கே.என்.நேரு
பின்னர், முத்து சட்டைநாதர், மூலவர் பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், திருநிலை நாயகி அம்பாள், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சன்னதிகளில் வழிபாடு செய்தனர். இக்கோயில் அஷ்ட பைரவர் மற்றும் முத்து சட்டைநாதர் சன்னதியில் ஆண்கள் மேல் சட்டை அணிந்து செல்ல கூடாது என்பது ஐதீகம் என்பதாலும், பெரும்பாலும் கோயில் உள்ள ஆண் மேல் சட்டை அணியாமல் வழிபாடு செய்து வழக்கம் என்பதால், அமைச்சர் கே.என்.நேரு சன்னிதி உள்ளே மேல் சட்டை அணியாமல் சாமி தரிசனம் செய்தனர். தற்போது அமைச்சர் கே.என்.நேரு மேல் சட்டை அணியாமல் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
செய்தி சேகரிப்பதை தடுத்த பி.எஸ்.ஓ
இதனிடையே அமைச்சர் சுவாமி தரிசனம் செய்வது குறித்து அறிந்த செய்தியாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அப்போது செய்தியாளர்களை அமைச்சரின் பி.எஸ்.ஓ எடுக்கக் கூடாது என தடுத்தது மிரட்டல் விடுத்தார். இதனால் செய்தியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.