மயிலாடுதுறை மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவரைக் கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், குற்றவாளி விக்னேஷுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இது கடந்த ஆறு மாதங்களில் போக்சோ வழக்கில் மயிலாடுதுறையில் விதிக்கப்பட்ட 9-வது தண்டனைக்குரிய தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

வழக்கின் பின்னணி

மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை, பெரம்பலூர் மாவட்டம் திட்டக்குடி, பூதக்குடியைச் சேர்ந்த செல்வம் மகன் விக்னேஷ் (வயது 25), 2021-ஆம் ஆண்டு கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்துறையினர் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்-2012 (போக்சோ) பிரிவின் கீழ் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கை அப்போதைய மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி விசாரித்து, விக்னேஷை கைது செய்து அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

Continues below advertisement

நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்பு

இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் அரசு வழக்குரைஞர் ராமசேயோன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, விக்னேஷை குற்றவாளி எனத் தீர்மானித்து, அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 3,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்தத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. தீர்ப்பைத் தொடர்ந்து, காவல்துறையினர் தற்போது 29 வயதாகும் விக்னேஷைக் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

இந்தத் தீர்ப்பு, சமூகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், சமூக ஆர்வலர்கள் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள், வீடுகளிலும், வீடுகளுக்கு அருகிலுள்ள நபர்களை நம்பியும் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், இந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள், குழந்தைகளைக் கடவுளுக்கு நிகராக எண்ணாமல், பாலியல் ரீதியாகச் சீண்டல்களிலும், சிறு பிள்ளைகளுக்குத் திருமண ஆசை காட்டுவதிலும் ஈடுபடுகின்றன. உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்குரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என யாருமே குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்பதில் தற்போது விதிவிலக்காக இல்லை என்றும், ஏராளமான பெண் குழந்தைகள் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு கவனத்திற்கு 

இதனைத் தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, கூடுதல் முக்கியத்துவம் அளித்து, இது போன்ற குற்றங்களைத் தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், குழந்தைகளைப் பாதுகாக்க வலுவான சட்ட அமலாக்கத்தையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

இவ்வழக்கை வெற்றிகரமாகத் தண்டனையில் முடிக்க சிறப்பாகப் பணியாற்றிய அரசு வழக்குரைஞர் ராமசேயோன் மற்றும் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார். இந்தத் தீர்ப்பு, குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாகச் செயல்படும் என்ற செய்தியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.