மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் மலிவு விலையில் பட்டாசுகள் வாங்கும் வண்ணம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் 7 இடங்களில் மலிவு விலையில் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறியுள்ளார்.


மலிவு விலை பட்டாசு


மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட நாராயணன்பிள்ளை தெருவில் இயங்கி வரும் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைமை அலுவலகத்தில் தீபாவளி பட்டாசு விற்பனை கடையினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்து வைத்து , முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இதில் குறைந்த விலையில் சிறந்த தரத்தில் பசுமை பட்டாசுகள் உட்பட அனைத்து விதமான வெடிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 




பட்டாசு வாங்கிய ஆட்சியர் 


முதல் விற்பனையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதியும் அக்கடையில் பட்டாசுகளை வாங்கினார். அப்போது டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்த கியூ.ஆர் கோடு வசதி ஏற்பாடு செய்யப்படாததை கண்டு அதிருப்தி தெரிவித்த ஆட்சியர் மகாபாரதி, அங்கிருந்த அதிகாரிகளிடம் தற்போது உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்றார்போல் அப்டேட் ஆக மாட்டீர்களா? என கடிந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் ரோட்டில் விற்பனை செய்யும் சின்ன காய்கறி கடையில் கூட டிஜிட்டல் பரிசோதனை வசதி உள்ளது‌ என்றும், உடனடியாக கியூ.ஆர் ஸ்கேனர் வசதியை ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 




தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தை செயல் எல்லையாக கொண்டு மயிலாடுதுறை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை செயல்பட்டு வருகிறது. இப்பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் 67 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் இப்பண்டகசாலை 361 அங்காடிகளுக்கு முதன்மை சங்கமாக இருந்து பொதுவிநியோகத் திட்ட பொருள்களை மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்து வருகிறது.


கரும்பு விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. உங்களுக்கு ஊக்கத்தொகை அறிவிச்சிருக்காங்க!




7 இடங்களில் பட்டாசு விற்பனை 


இந்நிலையில் 2024 -ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக பொதுமக்கள் குறைந்த விலையில், தரமான பட்டாசுகளை வாங்கி பயனடையும் வகையில் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை தலைமையகம், பி.எஸ்.என்.எல் அலுவலகம் தென்னமரச்சாலை, கூறைநாடு, காவேரிநகர், குத்தாலம், செம்பனார்கோயில் மற்றும் சீர்காழி என மொத்தம் 7 இடங்களில் பட்டாசு விற்பனை பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது. 


Diwali Release Movies: அமரன் முதல் பகீரா வரை! தீபாவளிக்கு மல்லுகட்டும் படங்கள் இத்தனையா?


1 கோடியே 32 லட்சம் ரூபாய்க்கு விற்பனை 


கடந்த 2023-ஆம் ஆண்டு மொத்தம் 7 கடைகளிலும் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான தீபாவளி பட்டாசு விற்பனையாகி உள்ளது. இவ்வாண்டும் தீபாவளி பட்டாசு விற்பனை சிறப்பாக நடைபெற வேண்டும். பொதுமக்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.




இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ், மயிலாடுதுறை வருவாய் கோட்டச்சியர் விஸ்ணுபிரியா, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் ராஜேந்திரன், அண்ணாமலை, மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் துணைப்பதிவாளர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.