மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே டித்வா புயலின் காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பி தாக்கியதில் 19 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் , இன்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, காசோலையை வழங்கினார்.

Continues below advertisement

புயல் பாதிப்பில் ஏற்பட்ட சோகம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீபத்தில் டித்வா புயல் தாக்கத்தால் கனமழையும், வழக்கத்திற்கு மாறான காற்றும் வீசியது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், மின் கம்பங்கள் சரிந்தும், மின் கம்பிகள் அறுந்தும் பெரும் சேதங்கள் ஏற்பட்டன.

 

Continues below advertisement

இத்தகைய சூழலில், சீர்காழியை அடுத்த செம்பதனிருப்பு வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பிரதாப் ( வயது 19) என்பவர், கடைவீதிக்குச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

விபத்து மற்றும் உயிரிழப்பு

பிரதாப் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, செம்பதனிருப்பு பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்றினால் அறுந்து தொங்கி கொண்டிருந்த மின் கம்பி எதிர்பாராத விதமாக பிரதாப் மீதுபட்டது. இதில் துரதிர்ஷ்டவசமாக, அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்ததால், பிரதாப் மீது மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்தார். மின்சாரம் தாக்கிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பிரதாப், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

போலீசார் விசாரணை

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாகசாலை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த இளைஞர் பிரதாப்பின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சோகமான விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கம்பிகள் அறுந்து கிடந்தும், ஏன் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதல்வர் உத்தரவில் நிவாரணம்

இளைஞர் பிரதாப் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உடனடியாக வருத்தம் தெரிவித்ததுடன், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், முதல்வரின் உத்தரவின் பேரில், பிரதாப்பின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டது.

எம்.எல்.ஏ. ஆறுதல் 

இதனைத் தொடர்ந்து, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், இன்று (டிசம்பர் 1) செம்பதனிருப்பு கிராமத்திற்கு நேரில் சென்றார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த பிரதாப்பின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

"இத்தகைய துயரமான இழப்பை ஈடுசெய்ய எதுவும் இல்லை. ஆனாலும், அரசின் கடமையைச் செய்யும் விதமாக, தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் இந்த நிவாரணத் தொகையை வழங்குகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம்," என்று கூறி எம்எல்ஏ பன்னீர்செல்வம் , ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை பிரதாப்பின் பெற்றோரிடம் வழங்கினார். இந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் அருள்ஜோதி மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பாதுகாப்பு உறுதி செய்ய கோரிக்கை

புயல் மற்றும் கனமழையின் போது மின்வாரியத் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.