மயிலாடுதுறைக்கு அருகே உள்ள புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60-வது பிறந்தநாள் (மணி விழா) கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மணிவிழாவில் கலந்துகொள்ள பெங்களூரைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஸ்ரீ மதுசூதனன் சாய் ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தவர் மயிலாடுதுறையில் 60 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனை அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணிவிழா

தருமபுரம் ஆதீனத்தில் கடந்த நவம்பர் 1-ம் தேதி துவங்கி பத்து நாட்களுக்கு ஆன்மீக மாநாடு மற்றும் மணி விழாச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீகத் துறை பிரபலங்கள் பங்கேற்று வரும் இந்த விழாவில், இன்று ஸ்ரீ மதுசூதனன் சாய் குளோபல் மனிதநேய இயக்கத்தின் (Sri Madhusudan Sai Global Humanitarian Mission) நிறுவனர் ஸ்ரீ மதுசூதனன் சாய் பங்கேற்றது சிறப்பு சேர்த்தார்.

ஹெலிகாப்டரில் வருகை: உற்சாக வரவேற்பு

ஸ்ரீ மதுசூதனன் சாய், பெங்களூரில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மயிலாடுதுறைக்கு வருகை புரிந்தார். மன்னம்பந்தலில் அமைந்துள்ள ஏ.வி.சி. கல்லூரி மைதானத்தில் அவருடைய ஹெலிகாப்டர் வந்து தரையிறங்கியது.

Continues below advertisement

அவரை ஆதீனம் சார்பில் வரவேற்கப் பல முக்கிய நிர்வாகிகள் அங்கு குழுமியிருந்தனர். சீர்காழி தமிழ்ச் சங்கத் தலைவர் இமயவரம்பன் மார்க்கோனி, நீதிபதி கார்த்திக், ஆதீனத்தின் கட்டளை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஹெலிபேடிலேயே ஸ்ரீ மதுசூதனன் சாய்க்கு உற்சாக வரவேற்பு அளித்து, அவரை ஆதீன மடத்திற்கு அழைத்து வந்தனர்.

குரு மகா சன்னிதானத்துடன் சந்திப்பு

தொடர்ந்து, தருமபுரம் ஆதீன மடத்திற்கு வருகை தந்த ஸ்ரீ மதுசூதனன் சாய், குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, ஆதீன மடாதிபதி, ஸ்ரீ மதுசூதனன்  சிறப்பு நினைவுப் பரிசையும் வழங்கி கௌரவித்தார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, மணி விழா மாநாடு நடைபெற்ற தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி கலையரங்கில் நடந்த விழாவில் இருவரும் இணைந்து பங்கேற்றனர்.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விழாவின் ஒரு பகுதியாக, தருமபுரம் ஆதீனம் சார்பில் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருநங்கைகள் மற்றும் பெண்களுக்கு உதவும் நோக்கில், அவர்களுக்குத் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆதீன மடாதிபதி மற்றும் ஸ்ரீ மதுசூதனன் சாய் இருவரும் இணைந்து வழங்கினர். இதன் மூலம், அவர்கள் சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற ஊக்குவிக்கப்பட்டனர்.

மயிலாடுதுறையில் மருத்துவமனை 

விழாவில் பேசிய ஸ்ரீ மதுசூதனன் சாய், குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் மனிதநேயப் பணிகளைப் பெரிதும் பாராட்டினார்.

"பிறருக்காக மட்டுமே வாழும் மரங்கள், நதிகள் போல, குருமகா சன்னிதானமும் ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்து உழைத்து வருகிறார். அவர் சனாதன தர்மத்தைப் பரப்புவதோடு மட்டுமல்லாமல், கல்விச் சேவை, மருத்துவச் சேவை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய உதவிகளையும் வழங்கி வருகிறார்," என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், இந்தப் புண்ணிய பூமியான மயிலாடுதுறை மண்ணிற்குத் தன்னுடைய அமைப்பின் பங்களிப்பாக, ஸ்ரீ மதுசூதனன் சாய் குளோபல் மனிதநேய இயக்கம் சார்பில் மயிலாடுதுறையில் மக்களுக்குப் பயன்படும் வகையில் 60 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவரது இந்த அறிவிப்பு அங்கு கூடியிருந்த மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த மணிவிழா நிகழ்வில் நீதிபதிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், ஆதீனத்தின் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று, குருமகா சன்னிதானத்தின் ஆசியைப் பெற்றனர்.