மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்தவர்களின் பெயரில் போலியாக ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி வீட்டு மனைகளைப் பத்திரப்பதிவு செய்ய முயற்சி நடந்ததாகவும், இதில் ஈடுபட்ட சார் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

என்ன நடந்தது?

சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம், நடராஜன், மற்றும் கண்ணன் ஆகியோர் சகோதரர்கள். இவர்களுக்குச் சொந்தமாக நத்தம் வகை வீட்டு மனை இருந்துள்ளது. இவர்களில் சண்முகம், நடராஜன், கண்ணன் ஆகியோர் ஏற்கனவே காலமான நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் இந்தச் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்துள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி, காலமான மூன்று சகோதரர்களின் பெயரிலும் போலியாக ஆதார் அட்டைகளைத் தயார் செய்து, சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்த வீட்டு மனைக்கான கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Continues below advertisement

வெளிச்சத்துக்கு வந்த மோசடி 

இந்த மோசடிப் பத்திரப்பதிவு குறித்து பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சிலருக்குத் தெரியவரவே, அவர்கள் உடனடியாக இந்த முறைகேடு குறித்து விசாரிக்கத் தொடங்கினர். போலி ஆவணங்கள் மூலம் இறந்தவர்களின் சொத்தை கிரயப் பத்திரம் செய்ததைக் கண்டித்து, மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி புகார் மனு ஒன்றைச் சமர்ப்பித்தனர்.

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, மாவட்ட சார் பதிவாளர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். விசாரணையின் அழுத்தம் காரணமாகவோ என்னவோ, அடுத்த நாளே (மே 21), சர்ச்சைக்குரிய கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்த நபர்கள் தாங்களாகவே ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது.

நடவடிக்கை இல்லை

பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்ட போதிலும், இறந்தவர்களின் சொத்தை அபகரிக்க முயற்சி செய்ததோடு, அதற்காகப் போலியான அரசு ஆவணங்களான ஆதார் அட்டைகளைப் பயன்படுத்திய நபர்கள் மீதும், இந்தப் போலி ஆவணங்களைப் பெற்றுப் பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த புகார்தாரர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட பதிவாளர், சீர்காழி சார் பதிவாளர் உட்படப் பல்வேறு தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார் மனுக்களை அனுப்பி வந்தனர். ஆனால், புகார் அளித்து மாதங்கள் கடந்த பின்னரும், சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது அதிகாரிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றவாளிகளுக்கு அதிகாரிகள் துணை போகிறார்களோ என்ற ஐயத்தையும், பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியையும் இது ஏற்படுத்தியது.

ஆர்ப்பாட்டம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தை

தொடர்ந்து அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், பொறுமையிழந்த பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சீர்காழி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், கடமையைச் சரிவரச் செய்யாமல் போலி ஆவணங்களை ஏற்றுப் பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் உருவானதுடன், சில மணி நேரங்களுக்குப் பத்திரப்பதிவுப் பணிகளும் பாதிக்கப்பட்டன.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சார் பதிவாளர் மூலம், போலி ஆவணம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போலியாக ஆதார் அட்டைகள் தயாரித்து, இறந்தவர்களின் சொத்துக்களைப் பதிவு செய்ய முயன்ற இந்தச் செயல், பத்திரப்பதிவுத் துறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.