சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொண்டல் பகுதியைச் சேர்ந்த அண்ணன், தம்பி மற்றும் அவர்களின் உறவினர் ஒருவர் என மூன்று பேர் ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பனங்காட்டங்குடி கிராமம் வழியாக செல்லும் கொள்ளிடம் ஆற்றில் கொண்டல் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான சிபிராஜ் அவரது தம்பி பரத்ராஜ், மற்றும் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த அவர்களது உறவினர் 21 வயதான அருண் சங்கர் ஆகிய மூன்று இளைஞர்களும் நண்பர்களுடன் இணைந்து கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
தற்போது மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் ஆற்றில் செல்லும் நிலையில், ஆற்றின் ஆழம் சில இடங்களில் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்துள்ளது, இருந்தபோதிலும் வழக்கமாக குளிக்கும் இடம் என்பதால், அவர்கள் பெரிய எச்சரிக்கையின்றி ஆற்றில் இறங்கியுள்ளனர்.
ஆழத்தில் சிக்கிய இருவர்
அப்போது குளித்துக் கொண்டிருந்தபோது, சிபிராஜ் மற்றும் அருண் ராஜ்குமார் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். நீரோட்டத்தின் வேகமும், ஆற்றின் எதிர்பாராத ஆழமும் அவர்கள் சிக்கிக்கொண்டதால், அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பரத்ராஜ் அதிர்ச்சியடைந்து, உதவி கோரி சத்தமிட்டுள்ளார். மேலும் தனது அண்ணனும், உறவினரும் நீரில் மூழ்கி தத்தளிப்பதைப் பார்த்த அவர், உடனடியாக கிராம மக்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
மீட்புப் பணி மற்றும் சோக முடிவு
பரத்ராஜின் அலறல் சத்தம் கேட்டு, பனங்காட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நேரம் ஒரு வினாடி கூட வீணடிக்காமல், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நீரில் மூழ்கிய சிபிராஜ் மற்றும் அருண் ராஜ்குமார் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தீவிர தேடுதல் பணிக்குப் பிறகு, தண்ணீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களையும் கிராம மக்கள் மீட்டனர்.
மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக ஆற்றுப் படுகைக்குக் கொண்டுவரப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி தீயணைப்புத் துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவருக்கும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. சிபிராஜ் மற்றும் அருண் ராஜ்குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மருத்துவக் குழுவினர் அவர்களை பரிசோதித்துப் பார்த்து, இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்
இந்தச் சோக நிகழ்வு குறித்து தகவல் அறிந்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை இழந்த துயரத்தில் மூழ்கியிருந்த குடும்பத்தினருக்கு அவர் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
முதலமைச்சர் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் வட்டம், பட்டமங்கல ஆராய தெருவைச் சேர்ந்த அருண்சங்கர் (வயது 22) மற்றும் சீர்காழி வட்டம், கொண்டல் கிராமம், குடியான தெருவைச் சேர்ந்த சிபிராஜ் (வயது 21) ஆகிய இருவரும் சீர்காழி வட்டம், அகரஎலத்தூர் கிராமம், பனங்காட்டங்குடி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும் இச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டார்.
நிதியுதவி வழங்கிய எம்எல்ஏக்கள்
அதனை தொடர்ந்து உயிரிழந்த இளைஞர் சுபிராஜுன் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலையை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினரிடம் வழங்கினார். இதில் சீர்காழி வட்டாட்சியர் அருள் ஜோதி, சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் ஹரிஹரன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதேபோல் அருண்சங்கர் குடும்பத்திடம் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் நேரில் வழங்கினர்.