ABP NADU IMPACT: ஏபிபி நாடு செய்தி எதிரொலி; அமைச்சரின் தாயார் ஊரில் மயானத்திற்கு விரைந்து சாலை அமைக்க ஆட்சியர் உத்தரவு

துர்கா ஸ்டாலின் சொந்த ஊரில் மயானத்திற்கு செல்ல சாலை இன்றி ஆபத்தான முறையில் இறந்தவர்களின் உடலை சுமந்து செல்வது குறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்துள்ளார். 

Continues below advertisement

துர்கா ஸ்டாலின் சொந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் மயானத்திற்கு செல்ல முறையான சாலை மற்றும் பாலம் வசதி இல்லாததால் வயல் மற்றும் வாய்க்கால்களில் இறந்தவரின் உடலை தங்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் எடுத்துச் செல்லும் அவல நிலை குறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Continues below advertisement

தொடரும் சுடுகாடு சாலை பிரச்சினைகள்

பொதுவாக சாலை பிரச்சனை தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் அதுவும் கிராமப்புறங்களில் தீர்க்க முடியாத பிரச்சனையாக நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக மயானத்திற்கு செல்லும் பாதை இல்லை எனக் கூறி இறந்தவர்களின் உடலுடன் போராட்டம் செய்யும் சம்பவங்களும் அவ்வபோது தமிழகத்தில் நடந்தேறி வருகிறது. ஆனால் அதற்கான முழுமையான தீர்வு என்பதை இன்றளவும் அரசால் சாத்தியப்படுத்த முடியவில்லை. நான்குவழிச் சாலை, எட்டு வழி சாலை என சாலை விரிவாக்க பணிகளுக்காக பல லட்சம் ஏக்கரில் விலை நிலங்கள் குடியிருப்புகள் என கையகப்படுத்தி சாலை அமைக்கும் அரசால், சாமானிய மக்களுக்கான மயானங்களுக்கு சாலை என்பது இன்றளவும் பெரும் போராட்டமாகவே இருந்து வருகிறது.


திருவெண்காடில் சுடுகாடு சாலை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பர் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. உயிரிழந்த முத்துகிருஷ்ணனின் உடலை நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு செல்லும் சாலை போதிய வசதி இல்லாததால் வயல் மற்றும் வாய்க்கால்களின் வழியே அவரின் உடலை எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.


பொதுமக்களின் குற்றச்சாட்டு 

மணிக்கரணை கூழவாய்க்காலில் பாலம் கட்டி, மயான செல்லும் சாலை அமைத்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும், இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டை பதிவு செய்யும் கிராமவாசிகள், இறந்த முத்துகிருஷ்ணனின் உடலை வாயல் வழியே வாய்க்காலில் இறங்கி பாதுகாப்பு அற்ற முறையில் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அப்பொழுது அவரது உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி ஏறும் போது வழுக்கி விழுந்து நிலை ஏற்பட்டது.


இதேபோல் இப்பகுதியில் இறப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அடக்கம் செய்வது வருவதாகவும், வாய்க்கால்களில் குறைந்த அளவு தண்ணீர் செல்லும் போது இந்த நிலையில் என்றால், மழைக்காலங்களில் இந்த நிலை மிகவும் மோசம இருக்கும் என்றும், எனவே இனிவரும் காலங்களிலாவது அரசு மணிக்கரணை கூழவாய்க்காலில் பாலம் அமைத்து மயானத்திற்கு செல்ல முறையான சாலை அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர்

மேலும் இந்த ஊர் தமிழக முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலினின் சொந்த ஊராகும், அது மட்டும் இன்றி அவரும், முதல்வர் , விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அவ்வபோது இங்கு வந்து செல்லும் நிலையில், இந்த ஊருக்கே இந்த நிலைமையா? என பலரும் வேதனை தெரிவித்தனர். 


ஏபிபி நாடு செய்தி  எதிரொலி

இந்நிலையில் இது குறித்து ஏபிபி நாடு செய்தி தளத்தில் செய்தி வெளிட்டது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று திருவெண்காடு ஊராட்சியில் மயானத்திற்கு செல்வதற்கு சாலை அமைக்க தேவையான சாத்திய கூறுகள் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், இப்பணியினை தொடர்ந்து கண்காணித்து விரைவில் சாலை அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இவ்வாய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருப்பதி, சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Continues below advertisement