பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான ஆதார் அட்டையின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான நிரந்தர ஆதார் மையம் சீர்காழியில் மூடியை கிடப்பதால் மாணவர்களும், பொதுமக்களும் பெரும் ஏமாற்றத்திற்கும், சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர். அரசு நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகை போன்ற முக்கியமான தேவைகளுக்கு ஆதார் சேவை மையத்தை நாடி வரும் பொதுமக்கள், மையத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் நிரந்தர ஆதார் சேவை மையம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சீர்காழி கிளைச் சிறைச்சாலை எதிரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இது சீர்காழி புதிய பேருந்து நிலையம் மற்றும் நகரின் மையத்தில் அமைந்துள்ளதால், சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வந்து தங்களின் ஆதார் தொடர்பான சேவைகளைப் பெற்று வந்தனர்.
திடீர் மூடல் - காரணம் என்ன?
இந்நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் செயல்படும் இந்த நிரந்தர ஆதார் சேவை மையத்தில் பணியாற்றும் பணியாளரை அதிகாரிகள் அங்கே பணியில் ஈடுப்படுத்தாமல், வேறு இடங்களுக்கு சென்று ஆதார் முகாம் நடத்த சொல்லி உத்தரவு இட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிரந்தர ஆதார் சேவை மையம் செயல்படுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
அரசுக்கு அவப்பெயர்
கல்வி உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை போன்ற முக்கிய அரசுத் திட்டங்களுக்கு ஆதார் அத்தியாவசியமான ஒன்று என்பதால் வெகுதூரத்தில் இருந்து ஆதார் சேவைகளை நாடி வரும் மக்கள், மையம் மூடப்பட்டிருப்பதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இது குறித்து வேதனையுடன் பேசிய பொதுமக்கள், சீர்காழியில் செயல்படும் நிரந்தர ஆதார் சேவை மையத்தை பூட்டி வைத்துவிட்டு, அந்த பணியாளரை வேறு இடங்களில் முகாம் அமைக்க அனுப்புவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயல். நிரந்தர ஆதார் மையம் அல்லது ஆதார் முகாம்களூக்கு புதியதாக பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், அதனை விடுத்து நிரந்தர ஆதார் மையத்தில் பணியில் இருக்கும் ஊழியரை முகாம்களுக்கு அனுப்புவதால் நாள் தோறும் நிரந்தர ஆதார் மையம் இருக்கும் என்ற நம்பிக்கையில் வரும் நூற்றுக்கணக்கான மக்களை அலை கழிப்பது அரசுக்கு அவப்பெயரை மட்டுமே ஏற்படுத்தும் செயலாகும். மேலும், " ஆதார் சேவையை முடக்குவது என்பது அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்குச் சென்றடையாதபடி தடுத்து, அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்" என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஆதார் சேவை மையம் தொடர்ந்து செயல்படுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் ஆதார் சேவைகளை முடக்குவது, மக்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதற்கு சமம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். நிரந்தர ஆதார் மையம் திடீர் மூடல், சீர்காழி மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. மாவட்டம் நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, நிரந்தர ஆதார் சேவை மையம் தொடர்ந்து செயல்பட வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.