மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகே பழையாறு கிராமம் அமைந்துள்ளது. அங்குள்ள மீன்பிடித் துறைமுகத்தில், கடந்த ஒரு மாதமாக மீன்வரத்து குறைந்து மீனவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்திருந்த நிலையில், 300 கிலோ எடை கொண்ட ராட்சத சுறா மீன் ஒன்று வலையில் சிக்கி, மீனவர்களின் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரிய வகை சுறா மீன் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விலைபோனதால், மீனவர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

Continues below advertisement


மீன்பிடித் தொழிலில் சவால்கள்


பழையாறு மீன்பிடித் துறைமுகத்தை நம்பி சுமார் 6,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். தினந்தோறும் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். ஆனால், கடந்த ஒரு மாத காலமாக, விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்து வரும் மீனவர்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை. இதனால், சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற படகுகள் கடலுக்குள் சென்றாலும், சிறிய ரக மீன்கள் மட்டுமே கிடைத்து வருவதால், மீனவர்களுக்குப் போதிய லாபம் கிடைப்பதில்லை என வருத்தம் தெரிவித்து வந்தனர்.




திடீர் அதிர்ஷ்டம்


இந்தச் சூழ்நிலையில், வழக்கம்போல் ஒரு விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். கடற்கரையிலிருந்து சுமார் 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, படகின் வலையில் ஒரு பெரிய மீன் சிக்கியதைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்தனர். வலையை இழுக்கும்போது ஏற்பட்ட கடுமையான எடை காரணமாக, அது ஒரு பெரிய மீன் என்பதை உணர்ந்தனர். மற்ற படகுகளின் உதவியுடன், மிகவும் சிரமப்பட்டு, அந்த மீனைப் பத்திரமாகப் படகில் ஏற்றினர்.




பின்னர், அந்த மீனைப் பக்குவமாகத் துறைமுகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தபோது, அது ஒரு ராட்சத சுறா மீன் என்பது தெரியவந்தது. அந்த மீன் 12 அடி நீளமும், 3 அடி அகலமும், 300 கிலோ எடையும் கொண்டிருந்தது. இத்தகைய பெரிய சுறா மீன்கள் பொதுவாக மீனவர்களின் வலையில் சிக்குவது மிகவும் அபூர்வமான நிகழ்வு. அதனைத் தொடர்ந்து கடும் போராட்டத்திற்குப் பின்னரே அந்த மீனை மீனவர்கள் கரைக்குக் கொண்டு வந்தனர்.


₹1.5 லட்சத்திற்கு விலைபோன சுறா


இந்த ராட்சத சுறா மீனைப் பற்றி அறிந்ததும், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அதனைப் பார்க்கக் குவிந்தனர். அதிசயத்துடன் இந்த மீனைப் பார்த்த அவர்கள், அதன் பிரம்மாண்டமான தோற்றத்தைக் கண்டு வியந்தனர். இந்த சுறா மீன் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விலைபோனதாக மீனவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மீனவர் ஒருவர் பேசுகையில், "கடந்த சில நாட்களாக மீன்வரத்து மிகவும் குறைந்துவிட்டது. இதனால், படகுகளின் எரிபொருள் செலவைக் கூட ஈட்ட முடியாமல் தவித்து வந்தோம். இந்தச் சுறா மீன் எங்களின் கஷ்டத்தைக் குறைத்துள்ளது. இதுபோன்று பெரிய மீன்கள் கிடைத்தால், எங்கள் வாழ்வாதாரம் மேம்படும்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.




இந்தச் சம்பவம், பழையாறு மீனவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ராட்சத சுறா மீன், மீனவர்களின் ஒரு மாத கால கஷ்டத்தைப் போக்கியது மட்டுமின்றி, கடல்வளம் குறித்த ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.