மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கண்ணார் தெரு பகுதியில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்ட திமுக அலுவலகம். இங்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கமிட்டி கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது.
கோஷ்டி பூசல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் ஒரு கோஷ்டியும், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய மற்றொரு அணியாக செயல்பட்டு வருகிறது. இரண்டு பிரிவுகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பலத்த கோஷ்டி பூசல்கள் இருந்து வருகிறது.
மீண்டும் கைகலப்பு
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கமிட்டி கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ஸ்ரீதரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் விக்னேஷ் என்பவர் வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அதனை கண்ட மாவட்ட செயலாளர் நிவேதா முருகனின் ஆதரவு பொறுப்பாளர்கள் செல்போனை பறித்துள்ளனர். இதனால் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஏற்படுத்தியுள்ளது.
அப்போது தொடர்ந்து கமிட்டி கூட்டம் நடைபெற்ற கட்டிடத்திற்கு வெளியே ஒரு கும்பல் குவிக்கப்பட்டது. இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் முக்கிய பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். அதனைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற அலுவலகம் வாயில் கதவு இழுத்து மூடப்பட்ட நிலையில் அலுவலகம் உள்ளே கூச்சல் குழப்பம் நிலவி வந்தது.
ரத்தக்கறையுடன் வந்த ஒன்றிய செயலாளர்
அப்போது அலுவலகத்தின் உள்ளிருந்து மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகமணி ரத்தம் தோய்ந்த வேஷ்டியுடன் வெளியேறியது உள்ளே பிரச்சனை நடைபெற்றதை வெளிக்கொண்டு வருவதாக இருந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர். ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு, கூச்சல் குழப்பங்களுடன் பரபரப்புடன் கமிட்டி கூட்டம் நிறைவடைந்தது.
அமைச்சர் முன்னிலையில் முதல் மோதல்
கடந்த சில மே 15 -ம் தேதி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் நோக்கில் மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கே என் நேரு தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கே.என்.நேரு முன்பாகவே மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் செயல்பாடுகள் குறித்தும் அவர் மீதுள்ள அதிர்ச்சி குறித்தும் கூட்டத்தில் அமைச்சர் இடம் புகார் தெரிவிக்கப்பட்டது அப்போது அமைச்சர் கே.என்.நேரு, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்பு மயிலாடுதுறை மாவட்ட திமுகவினர் இடி தரப்பாக மோதிக்கொண்டனர்.
அப்போது அதனை கண்டித்த கே.என்நேரு இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருந்தார். ஆனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுகவினரிடையே நிலவும் கோஷ்டி பூசல் தொடர்பாக திமுக தலைமை இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் இது தரப்புக்கு இடையே தொடர்ந்து உட்கட்சிப் பூசல் காரணமாக பிரச்சனை நீடித்த நிலையில், இன்று கட்சி கூட்டத்தில் மீண்டும் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தின் மருமகன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறி வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்ட திமுகவினர் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.