திருவாரூர் அரசு மருத்துவமனையில் பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையே இறப்பிற்கு காரணம் என உறவினர் குற்றம்சாட்டி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


நாகை மாவட்டம் திருமருகல் வள்ளுவன் தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன்  நெடுமாறன். 32 வயதான இவர் ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு விவசாய வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தி வயலுக்கு சென்ற நெடுமாறனை பாம்பு கடித்து உள்ளது. இதனையடுத்து உடனடியாக திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நெடுமாறனை அங்கு உரிய மருந்துகள் இல்லாத காரணத்தினால் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்த அங்கு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 




திருவாரூர் அரசு மருத்துவமனையில் நெடுமாறனுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து நெடுமாறன் நல்ல உடல்நலத்துடன் இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர்கள் பாம்பு கடித்த இடத்தில் பரிசோதனைக்காக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு எவ்வித மயக்க மருந்து மற்றும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் செய்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து நெடுமாறனுக்கு கடுமையான மூச்சு தினறல் ஏற்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நெடுமாறனின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்தனர். இந்த நிலையில் நெடுமாறனின் தங்கையான இளையா என்பவர் 108 ஆம்புலன்சில் பணிபுரிந்து வருகிறார். அவர் நெடுமாறனுக்கு துணையாக மருத்துவமனையில் இருந்துள்ளார். அலட்சியமாக சிகிச்சை அளித்தனர் எனவும், தட்டி கேட்ட தன்னை திட்டியதுடன் வெளியில் அனுப்பியதாகவும் கூறி இளையா பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




மேலும், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சை அளிக்க முடியாமல் தாய் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சம்பவம் முடிவடைந்து சில நாட்களே ஆன நிலையில் மீண்டும் தற்பொழுது மருத்துவர்களின் அலட்சியத்தின் காரணமாக மற்றொரு உயிர் பிரிந்து இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இதே போன்று விஷயங்களில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண