Palani Temple Thaipusam: பழனி முருகன் கோயிலில் ஜனவரி 19ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றுத்துடன்(Thaipusam 2024 Flag Hoisting) துவங்க உள்ளது. இத்திருவிழா தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும்.


அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றுதலுடன் துவங்க உள்ளது. இத்திருவிழா தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும்.




இதில் முக்கிய நிகழ்வான ஏழாம் திருவிழா அன்று பூசம் நட்சத்திரத்தன்று தைப்பூச திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தருவார்கள். இதற்காக பக்தர்களுக்கு குடிநீர், தங்கும் இடங்கள், கழிவறைகள், வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட முன்னேற்பாடு வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பழனி திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.




இதில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, காவல்துறை அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை, போக்குவரத்து காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.




பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 2024ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா 19.01.2024ம் தேதி துவங்கி 28.01.2024ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.


திருவிழா நடைபெறும் இடம் : அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில், பழனி


கொடியேற்றம் : 19.01.2024 காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்


திருக்கல்யாணம் : 24.01.2024 இரவு 7.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள்


வெள்ளி ரதம் : 24.01.2024 இரவு 09.00 மணிக்குமேல்


தைப்பூசம் : 25.01.2024 அன்று தைப்பூசம்


திருத்தேரோட்டம்: 25.01.2024 அன்று மாலை 04.30 மணிக்குமேல்


தெப்பத்தேர் : 28.01.2024 இரவு 07.00 மணிக்கு மேல்


திருவிழா நிறைவு  : 28.01.2024 இரவு 11.00 மணிக்கு மேல் கொடியிறக்கம். திருக்கோயில் பழக்க வழக்கப்படி 25.01.2024 தைப்பூச திருவிழா நடைபெறுகிறது.