கண்மாய் மீன்பிடி ஏல கூட்டத்தில் தகராறு; குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கருங்காலக்குடி கண்மாயில் மீன்பிடி ஏலம் விடுவதில் ஏற்பட்ட தகராறில் ஆயுதங்களால் தாக்கி 6 பேர் காயமடைந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.





சிவகங்கை மாவட்டம் கருங்காலக்குடி கண்மாயில் மீன்பிடி ஏலம் விடுவது தொடர்பாக கிராம கமிட்டி கூட்டம் கடந்த 17 ஆம் தேதி மாலை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பிரேம்குமார், ராமமூர்த்தி, ரவிசந்திரன், மற்றொரு ராமசந்திரன் உட்பட சிலர் கிராம கமிட்டி நிர்வாகிகளிடம் தரக்குறைவாக பேசியதாகவும், கண்மாயில் மீன் பிடி ஏலம் விடுவது தொடர்பாக பிரச்னை செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது கிராம மக்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

 




 


 

இந்த முன்பகை காரணமாக அன்று இரவு 10 மணி அளவில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கும்பல் ரவி, நாகமணிகண்டன், முத்துலட்சுமி, ராஜா, வடிவேல், ஏலம்மாள் ஆகிய 6 பேரையும் தாக்கியதில் காயமுற்று சிவகங்கை அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பவம் நடந்து 3 நாட்களாகியும் குற்றவாளிகளை இதுவரை போலீசார் கைது செய்யாததை கண்டித்து கருங்காலக்குடி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையால் கலைந்து சென்றனர்.