சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரயில் இனி கோவில்பட்டியிலும் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மதிமுக மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது என்று எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துரை வைகோ ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது, மறுமலர்ச்சி திமுகவின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி ஒரு வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகும். இங்கு வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

Continues below advertisement

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 21.09.2023 அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்தார். அப்போது கோவில்பட்டியில் ரயில் நின்று செல்ல வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். அதன் பிறகு, நான்கே நாட்களில், அதாவது 25.09.2023 அன்று, மதிமுக சார்பில் கோவில்பட்டியில் ஒரு மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துரை வைகோ தலைமை தாங்கினார். ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய துரை வைகோ, கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும். அதற்கான முயற்சிகளை மறுமலர்ச்சி திமுக முன்னெடுக்கும் எனக் கூறினார்.

Continues below advertisement

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று போராட்டம் நடத்திய ஒரே இயக்கம் மதிமுக மட்டுமே என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், 18.08.2025 அன்று, துரை வைகோ மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். ரயில்வே துறை அதிகாரிகளை சந்திக்கும் போதெல்லாம் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது ரயில்வே துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மறுமலர்ச்சி திமுகவின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்று துரை வைகோ  தெரிவித்துள்ளார். கோவில்பட்டி மக்களின் குரலாக தலைவர் வைகோ அவர்களும், நானும் தொடர்ந்து இக்கோரிக்கையை ஒன்றிய இரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தி வந்தோம்.

தற்போது இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மதிமுக சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் துரை வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் தினமும்  நெல்லையிலிருந்து  காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. மறுபுறம், சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அன்று இரவு 10.40 மணிக்கு நெல்லை சந்திப்பை சென்று சேர்கிறது. தற்போது இந்த ரயில் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.