'வளரி'  தென் தமிழகத்தின் ஆகச்சிறந்த ஆயுதங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. சுதர்சன சக்கரம் போல் போற்றப்பட்ட இந்த ஆயுதம் எதிரியை நிலை குலைய வைப்பதில் வல்லமை கொண்டது. இந்த ஆயுதம் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட சில இடங்களில் அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. 1801 ஆண்டு ஆயுத தடைச் சட்டத்தின் போது ஆயிரக்கணக்கான வளரிகளும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. வளரியை வைத்திருக்கும் நபர்களுக்கு பெரும் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

 

யாரும் இதனை கற்றுவிடக் கூடாது என ஆங்கிலேய ஆட்சியாளர் கங்கணம் கட்டியிருந்தனர். கணிதம் - இயற்பியல் உதவியால் வளரியை வீசி எதிரியை மிரள வைத்துள்ளனர். விசை குறையவும் கூடாது, எடை கூடவும் கூடாது. குறிப்பிட்ட எடைக்கட்டுப்பாடு, திறன் உள்ளிட்டவைகளை  கணித்து வளரி வடிவமைக்கப்பட்டுள்ளது. மரக்கட்டை, உலோகம், தந்தம் உள்ளிட்ட பலவற்றை பயன்படுத்தி வளரிகள் செய்யப்பட்டுள்ளன.  திருமண சடங்குகளில் கூட வளரிகள் பயன்படுத்தி பெருமைகொள்ளும் அளவிற்கு வளரியின் நிலை இருந்துள்ளது. ஆங்கிலேயரின் அச்சத்தால் வளரி முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய வளரிகள் அருங்காட்சியகங்களிலும், சில கோயில்களிலும்,  சிலரது வீடுகளிலும் காணமுடிகிறது.




 

இந்நிலையில் சிவகங்கை சக்கந்தி கிராமத்தில் வளரியைக் காணச் சென்றோம். அந்த கிராமத்தில் அரண்மனை என்று சொல்லப்படும் பனை ஓலைகளால் வேய்ந்திருந்த கோயிலாக பார்க்கப்படும் அந்த இடத்திற்குச் சென்றோம். இராணி வேலுநாச்சியாரின் மருமகனும் மன்னருமான வேங்கை பெரிய உடையத்தேவரின் வழித் தோன்றலாக இருந்துவரும் குடும்பத்தினரை சந்தித்தோம். மலைராஜன் நம்மிடம்...,"   மண் சுவர், ஓலை உடன் இருக்கும் இந்த இடத்ததான் அரண்மனைனு சொல்லுவாக. எங்க தாத்தாரு, அப்பாக்கு அப்றம் நாங்க இந்த எடத்த பாதுகாக்குறோம். மன்னர் எங்களுக்கு என்ன முறையா இருக்கும்னு கணிக்க முடியல.




 

ஆனா அவருக்கு அப்றம் இத நாங்கதா பாதுகாக்குறோம். இங்க  இருந்த பழமையான ஆயுதங்கள கொஞ்சத்த சிவகங்கை மியூசியத்துக்கு குடுத்துட்டோ. இப்ப எங்கட்ட ரெண்டு வளரி ஒரு சில வேல்கம்பு, வாள் இது மாதிரியான ஆயுதங்கள் தான் இருக்கு. இத நாங்க சுத்தம் பண்ணி பாதுகாக்குறோ. மாட்டுப் பொங்கலுக்கு எடுத்து வச்சு சாமி கும்புடுவோம். அவ்ளோ தான். இந்த வளரி பயன்பாடெல்லாம் பத்தி முழுசா தெரியாது.  மரத்தாலன ரெண்டு வளரி இருக்கு. அத பொக்கிசமா நினைக்கிறோ. அதனால ஊர்த்திருவிழா வரும் போது இங்க வந்து விபூதியெல்லாம் வாங்கிட்டு போவாக.  முன்னாடியெல்லாம் இந்த இடத்துல வந்து பஞ்சாயத்து எல்லாம் பேசு முடிப்பாங்கலாம் அப்போ எல்லாரும் இந்த இடத்துக்கு பயந்து கட்டுப்பட்டு நடப்பாகனு சொல்லீருக்காக “ என்றார் இயல்பாக.

 




 

தொடர்ந்து கல்லல் அருகே உள்ள அரண்மனை சிறுவயல் கிராமத்தில் உள்ள பழமையான ஜமீன் அரண்மனைக்கு சென்றோம். சிதலமடைந்த நிலையில் காட்சியளித்த கோட்டைச் சுவர் வாயிலாக ஜமீன் அறைக்குள் நுழைந்தோம். 10க்கும் மேற்பட்ட வேல் கம்பு, 2 வளரி, சுறா தண்டில் செய்த ஆயுதம், குறுவாள், பல்வேறு வடிவங்களில் கர்லாக்கட்டை, கல்லில் செய்த உடற்பயிற்சி ஆயுதம் உள்ளிட்டவைகளை காண முடிந்தது. மருது பாண்டியர்கள் அங்கு போர் பயிற்சிகள் எடுத்துக் கொண்ட இடமாக இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் அந்த ஜமீன் அரண்மனையை பாதுகாக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

 



 

 தொல்லியல் ஆய்வாளர் புலவர் கா. காளிராசா விடம் பேசினோம்...," வளைதடி 'வளரி' என்றழைக்கப்படும் ஆயுதம் தென் மாவட்டங்களில் பரவலாக வேட்டை சமூகத்தாரும் காவல் சமூகத் தாரும் பயன்படுத்தி வந்த ஒன்றாகும். இன்றும்கூட கிராமப்புறங்களில் ஒரு சில வீடுகளில் வளைதடி கள் இருந்து பயன்படுத்தாமல் பயனற்று போனதாக கூறக் கேட்கலாம். பொதுவாக மனிதன் ஆடு மாடுகளை மேய்த்துத் திரியும் போதும் அவற்றைக் காக்க வேற்று விலங்குகளை விரட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம், இன்றும் ஆடுமாடுகள் மேய்ப்போர் கையில் தடி ஒன்றை வைத்து இருப்பதை நாம் காணமுடியும்.

 



 

அதைப்போல அன்றைய காலக்கட்டத்தில் விலங்கை விரட்டவும் போர்க்களத்தில் பகைவரிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தூரத்திலிருந்து எறிந்து விலங்கை பகைவரை வீழ்த்த பயன்படுத்தப்பட்ட கருவியே வளரி யாகும். இது மற்ற இடங்களில் இல்லாது குறிப்பிட்ட பகுதியில் பயன்படுத்தப்பட்டிருப்பது வியப்புக்குரியதே. புறநானூற்றில் அகுதை என்கிற குறுநில மன்னனோடு திகிரி இணைத்துப் பேசப்படுகிறது இந்த திகிரி இன்றைய வளரி யாக இருக்கலாம் என்பதும் இவன் ஆட்சி செய்தது கூடல் நகர்  மதுரை என்று வழங்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வீசிய வளரி பகைவரை தாக்கிவிட்டு விழும். அவ்வாறு எதிரியை தாக்காவிட்டால் மீண்டும் எறிந்தவர் கைகளுக்கோ, அருகிலோ வந்துள்ளது.

 

 



 மீண்டும் நம் கைக்கு வருவது போர்த் தொழிலில் நமக்கு இருந்த தொழில்நுட்ப அறிவை விளக்குகிறது. கொரில்லா போர்முறையைப் போன்றதாகவும் பார்க்கப்படுகிறது. எதிராளியை தாக்கி நிலைகுலையச் செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும். வளரி வீசுவது போர்க் கலைகளில் ஒன்றாக பின்னால் பயிற்சிபெற பெற்றிருக்கலாம். சிவகங்கைச் சீமை மருது சகோதரர்கள் வளரி வீசுவதில் வல்லவராக விளங்கியதாகக் கூறுவர். பூமராங் போன்ற கருவிகள் வளைதடியின் வளர்ச்சி நிலையாகக் கொள்ளலாம். பட்டை தெய்வங்களின் கையில் அருவா போன்ற ஆயுதங்கள் வருவதற்கு முன் வளைத்தடிகளே இருந்திருக்கும் இன்றும் பல இடங்களில் வளைதடி வழிபாடு பொருளாக இருக்கிறது. பெருமாளின் கையில் இருக்கும் திகிரி என்னும் சக்கரமும் பகைவரை தாக்கி அழித்துவிட்டு மீண்டும் அவர் கைக்கு வரும் என்பர். எப்படியாயினும் வளரி நமது பண்பாட்டு எச்ச நீட்சி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை" என்றார். 

 



 

வளரி குறித்து எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் கார்த்திக் ராஜாவிடம் பேசியபோது..., " வேட்டை, காவல், பறவை விரட்டுதல், போர் உள்ளிட்ட பல்வேறு முறைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் மட்டும் தான் வளரி பயன்பாடு இருந்துள்ளது. வடமாவட்டங்களிலோ, கொங்கு பகுதிகளிலோ இருந்தாக ஆவணங்கள் இல்லை. வளரி 12க்கும் மேற்பட்ட பெயர்களாலும் அழைக்கப்பட்டுள்ளன. வளரியை பயன்படுத்திய வீரர்களுக்கு நடுகல் சிலைகளும். மதுரை கருமாத்தூர் அடுத்த கோவிலாங்குளத்தில் உள்ள பட்டசாமி கோயில் இரும்பில் ஆன பல வளரியை காண முடியும். அதனை படையல் பொருளாக மக்கள் பாவிக்கின்றனர்.

 



பொதுவாக வளரி எறிந்த  பின் நம் கைகளுக்கு மீண்டும் வரக்கூடிய ஒன்று. நமது கைக்கோ அருகிலோ மீண்டும் வரலாம். எனினும் ஒரு இலக்கை குறிவைத்து அடிக்கும் போது மீண்டும் திரும்பும் என்று சொல்ல முடியாது. விசையில் சென்று இலக்கை தாக்கும் போது அதன் திறனை இழந்துவிடும் அதனால் அங்கே விழுந்துவிடும். குறிவைத்த இலக்கை தாக்காத பட்சத்தல் மீண்டும் கைகளுக்கு வரலாம்.  வளரி மண்ணில் இருந்து மட்டுமல்ல பலரது மனதில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. இது தமிழனுக்கு மிகப்பெரும் அடையாளம். இதனால் வளரியை மேலே எடுத்துச் செல்லவேண்டும் என தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு பயிற்சிகளும் அளித்துவருகிறேன். வளரியை  இனி ஆயுதமாக முன்னெடுக்காமல் விளையாட்டு போட்டியாக முன்னெடுக்க வேண்டும். அப்போது தான் அதன் அடையாளத்தை காப்பாற்ற முடியும்.

 



இதனால் தேசிய அளவில் பதிவு செய்து, 9 மாநிலங்களிலும், தமிழகத்தில் 13 மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்கிறோம். இன்டோ பூமராங் அசோசியேசன் தேசிய பொதுச் செயலாளராக உள்ளேன். 5 மாநில போட்டிகளை முன்னெடுத்துள்ள நாங்கள் அடுத்த கட்டமாக தேசிய அளவில் போட்டி நடத்த முடிவு செய்துள்ளோம். வளரி குறித்து நூல்கள் எழுதும் பணியிலும் இருக்கிறேன். எனினும் வளரி குறித்து பள்ளி, கல்லூரி பாடங்களில் அரசு இணைக்க வேண்டும்.  என்று கேட்டுக்கொண்டார்.